Select Location
All Locations
State
Region
City / District
திரிணமூல் எம்.பி. பிரகாஷ் சிக் பரைக் விலகல்: ஒரே வாரத்தில் 3 உறுப்பினர்கள் ராஜினாமா

திரிணமூல் எம்.பி. பிரகாஷ் சிக் பரைக் விலகல்: ஒரே வாரத்தில் 3 உறுப்பினர்கள் ராஜினாமா

புது டெல்லி: திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் பிரகாஷ் சிக் பரைக், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்த ஒரு வாரத்திற்குள் திரிணமூல் காங்கிரஸில் இருந்து ராஜினாமா செய்யும் மூன்றாவது மாநிலங்களவை உறுப்பினர் இவராவார். மாநிலங்களவை தலைவரும், குடியரசு துணைத் தலைவருமான சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பிரகாஷ் சிக் பரைக் அனுப்பிய ராஜினாமா கடிதத்தில், ‘நான் மாநிலங்களவை உறுப்பினர் பதவியிலிருந்து ராஜினாமா செய்கிறேன்; இதனை உடனடியாக ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். மாநிலங்களவை உறுப்பினராக எனது பதவிக்காலத்தில் அனைத்து உதவிகளையும் ஒத்துழைப்பையும் வழங்கிய தங்களுக்கும், துணைத் தலைவருக்கும் மற்றும் மாநிலங்களவை செயலகத்தின் அனைத்து அதிகாரிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த பின்னர் பேசிய பிரகாஷ் சிக் பரைக், “மேற்கு வங்க மக்களின் கருத்தை ஏற்று, நானும் இன்று எனது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்துள்ளேன்” என்றார். பாஜகவில் இணையப் போகிறீர்களா என்று கேள்விக்கு, “காலம்தான் பதில் சொல்லும்" என்று அவர் கூறினார். சமீபத்தில் நடந்துமுடிந்த மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது. 15 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த திரிணமூல் காங்கிரஸ் கட்சி 80 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியது. தேர்தல் தோல்வி ஒருபுறம் அழுத்த, மம்தா பானர்ஜிக்கு எதிராக ரிதப்ரதா பானர்ஜி தலைமையில் 61 எம்எல்ஏக்கள் மேற்கு வங்க சட்டப்பேரவையில் செயல்பட்டு வருகின்றனர். அதிக உறுப்பினர்கள் ஆதரவு உள்ளதால் ரிதப்ரதா பானர்ஜி சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக தேர்வானார்.

மம்தாவின் நம்பிக்கைக்குரியவரான சுகேந்து சேகர் ராய் மாநிலங்களவை உறுப்பினர் பதவியிலிருந்து சமீபத்தில் விலகினார். அதன்பின்னர் சுஷ்மிதா தேவ் மாநிலங்களவை எம்.பி பதவியிலிருந்து நேற்று விலகி திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சி கொடுத்தார். இந்தச் சூழலில் மூன்றாவது நபராக பிரகாஷ் சிக் பரைக் இன்று தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.


Hindu Tamil 1 hour ago
Home Flash News