ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' சிறப்பு காட்சிகள் தமிழ், தெலுங்கில் ரத்து!
பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடிப்பில் கடந்தாண்டு வெளியான படம் துரந்தர். இப்படம் உலகளவில் நல்ல வரவேற்பைப் பெற்று, ரூ.1,000 கோடிக்கு மேல் வசூலித்தது. இதனைத்தொடர்ந்து தயாரான இதன் இரண்டாம் பாகம் ‘துரந்தர்: தி ரிவெஞ்ச்’ நாளை வெளியாக உள்ளது. இந்நிலையில் இன்று இதன் சிறப்பு காட்சி சில திரையரங்குகளில் திரையிடப்படுகிறது. இந்நிலையில் தமிழ் மற்றும் தெலுங்கு வெர்ஷன் இன்று திரையிடப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹிந்தியில் மட்டும் படம் வெளியாகும் என்றும் விருப்பமுள்ளவர்கள் ஹிந்தியில் பார்க்கலாம் அல்லது பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என அந்தந்த திரையரங்க உரிமையாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் டப்பிங் செய்யப்பட்ட உள்ளடக்கம் திரையரங்குகளுக்கு உரிய நேரத்தில் வந்து சேராததே இந்த திடீர் ரத்திற்கு காரணம் எனக் கூறப்படுகிறது. ரத்து செய்யப்பட்ட பிராந்திய மொழிக் காட்சிகளுக்குப் பதிலாக, சில திரையரங்குகளில் அசல் ஹிந்தி பதிப்பு திரையிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆதித்யா தார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் மாதவன், சஞ்சய் தத், அக்ஷய் கன்னா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.