திமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த முன்னாள் அமைச்சர்; மு.க.ஸ்டாலினுக்கு பறந்த கடிதம்!
தமிழக வருவாய்த்துறை அமைச்சராக பதவி வகித்து வந்த முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் திமுகவில் இருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
கடந்த 2011-2016 ஆண்டின் அதிமுக ஆட்சியின் போது வருவாய்த்துறை அமைச்சராக இருந்த தோப்பு வெங்கடாச்சலம், 2021 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால் அந்த தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அதன் பின்னர், ஜூலை 2021ஆம் அன்று அன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அதனைத் தொடர்ந்து அவருக்கு திமுக ஈரோடு மத்திய மாவட்ட பொறுப்பாளர் பதவி கொடுக்கப்பட்டது. சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில், இவர் பெருந்துறை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார்.
இந்த நிலையில் திமுகவில் இருந்து அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக தோப்பு வெங்கடாசலம் அறிவித்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு அவரை ஈரோடு மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் பொறுப்பில் இருந்து திமுக தலைமை நீக்கிய நிலையில், இன்று அவர் திமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், “திமுக இருந்து அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து என்னை விடுவித்துக்கொள்ளக்கூடிய கடிதத்தை மு.க.ஸ்டாலினிடம் அனுப்பியுள்ளேன். இப்போதைக்கு எந்த இயக்கத்திற்கும் செல்லக்கூடிய எண்ணம் இன்று வரை எனக்கு இல்லை. தற்போது எந்த இயக்கத்திலும் சேர்வதற்குண்டான எந்த முயற்சியும் நான் எடுக்கவில்லை. தற்போது அந்த மனநிலையில் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.