ஆசிய விளையாட்டு போட்டி: வீரர்கள் தங்குமிட வசதியில் அதிருப்தி - இந்தியா, பாக். கிரிக்கெட் வாரியங்கள் கவலை
நகோயா: ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான உள்கட்டமைப்பு மற்றும் தங்குமிட வசதிகள் குறித்து இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட தெற்காசிய நாடுகளின் கிரிக்கெட் வாரியங்கள் கடும் கவலையும் அதிருப்தியும் தெரிவித்துள்ளன.
ஜப்பானின் ஐச்சி-நகோயா நகரில் வரும் செப்டம்பர் 19 முதல் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளன. ஆசிய விளையாட்டுப் போட்டியில் கிரிக்கெட் போட்டியும் இடம்பெற்றுள்ளது. இதில் மகளிருக்கான தொடர் செப்டம்பர் 17 முதல் 22 வரையிலும், ஆடவருக்கான தொடர் செப்டம்பர் 24 முதல் அக்டோபர் 3 வரையிலும் நடைபெறவுள்ளன.
இந்நிலையில் இந்த தொடரில் பங்கேற்கும் கிரிக்கெட் அணிகளுக்கான தங்குமிடம் மற்றும் கிரிக்கெட் மைதான வசதிகள் திருப்திகரமாக இல்லை என இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளின் கிரிக்கெட் வாரியங்கள் அதிருப்தி தெரிவித்துள்ளன.
போட்டிகள் நடைபெறவுள்ள கொரோகி ஸ்போர்ட்ஸ் பார்க் மைதானம், பேஸ்பால் மைதானத்தில் இருந்து தற்காலிகமாகக் கிரிக்கெட் மைதானமாக மாற்றப்பட்டு வருகிறது. இங்கு வீரர்களுக்கான உடை மாற்றும் அறைகள் கூடாரங்களில் அமைக்கப்பட்டுள்ளதாகவும், கழிப்பறைகள் சுமார் 500 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், புதிதாக அமைக்கப்பட்ட ஆடுகளங்கள் போதுமான அளவு சோதிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
இந்த வசதிகளை நேரில் ஆய்வு செய்ய ஆசிய கிரிக்கெட் கவுன்சில் பிரதிநிதிகளை அனுப்ப உள்ளது. இதனிடையே, வசதிகள் மேம்படுத்தப்படாவிட்டால் ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு இரண்டாம் தர அணியை அனுப்புவது குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது