‘Hi’ விமர்சனம்: கவின் - நயன்தாராவின் மனதை வருடும் காதல் கதை எப்படி?
மனித உறவுகளுக்கு நட்பு, காதல், குடும்பம் என ஏதோ ஒன்று அடிப்படையாக இருக்கலாம். தாம் எப்படி இருக்கிறோமோ அப்படியே ஒருவர் தன்னை நேசிக்க வேண்டும் என்ற ஏக்கம் பலருக்கு வாழ்நாளில் கிடைக்காமலே போய்விடக்கூடும். அந்த உணர்வைத் தேடி ஓடும் மனிதர்களின் வாழ்க்கையை மையமாக கொண்டு, இயக்குநர் விஷ்ணு எடவன் உருவாக்கியுள்ள திரைப்படம்தான் ‘ஹாய்’.
நாயகன் மயில்சாமிக்கு (கவின்) காதல் தவிர வாழ்க்கையில் எல்லாமே இருக்கிறது. ஆனால், தொடர்ச்சியான காதல் நிராகரிப்புகளுக்குப் பிறகு, அன்பான பெற்றோர் (பாக்யராஜ் - ராதிகா) ஏற்பாடு செய்யும் திருமணத்துக்கு பயந்து வீட்டை விட்டு சென்னைக்கு ஓடிப் போகிறார்.
மற்றொருபுறம், தன் மனைவி பல ஆண்டுகளுக்கு முன்பு தன்னை விட்டுவிட்டு ஓடிச் சென்றதால் குடிப்பழக்கத்துக்கு ஆளான தந்தையின் (பிரபு) மகளான தேவயானி (நயன்தாரா), தன்னை கட்டாயப்படுத்தி ஏற்பாடு செய்யும் திருமணத்திலிருந்து தப்பித்து சென்னை வருகிறார்.
வாழ்க்கையின் வெவ்வேறு கட்டங்களில் வீட்டை விட்டு வெளியேறிய இந்த இருவரும், சென்னையில் தற்செயலாகச் சந்திக்கிறார்கள். ஆரம்பகட்டத் தயக்கங்களுக்குப் பிறகு, இருவருக்குமான வேறுபாடுகளும், அவர்களின் சந்திப்புகளும் கதையை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்கின்றன.
கவின் - நயன் இருவருக்கும் இடையிலான காட்சிகள் ஒரு நல்ல ஹாலிவுட் ரோம்-காம் போல கியூட்டாகவும், எந்தவொரு 'கிரிஞ்ச்' தனமும் இல்லாமலும் நகர்கின்றன. அப்படியே ஒரு கட்டத்தில் கதை கோயம்புத்தூருக்கு நகர்ந்ததும், குடும்பம், நகைச்சுவை, கலாட்டாக்கள் நிறைந்த ஒரு தமிழ் ரோம்-காம் படமாக மாறுகிறது.