அப்பாச்சி ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தியதற்கு ஈரான் மீது அமெரிக்கா பதிலடி தாக்குதல்
வாஷிங்டன்: ஹார்முஸ் ஜலசந்தி அருகே ரோந்து பணியில் ஈடுபட்ட அமெரிக்காவின் அதி நவீன அபாச்சி ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டது. இந்த ஹெலிகாப்டர் மீது ஈரானே தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டியிருந்தார். மேலும் இந்த தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று டிரம்ப் எச்சரித்து இருந்த நிலையில், ஹார்மூஸ் அருகே உள்ள ஈரானின் ரேடார் தளங்கள், வான் பாதுகாப்பு அமைப்புகள் மீது அமெரிக்கா தாக்குதலை தொடங்கியது.
இஸ்ரேல் ஏற்கனவே தாக்குதல் தொடங்கியுள்ள நிலையில் அமெரிக்காவும் தாக்க தொடங்கியுள்ளதால், மீண்டும் மத்திய கிழக்கில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அமைதி பேச்சுவார்த்தை தொடருமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
மத்திய கிழக்கில் ஈரானுக்கும் அமெரிக்கா, இஸ்ரேலுக்கும் இடையேயான போரால் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக பதற்றம் நிலவி வருகிறது. தற்போது தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டு அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றாலும் இதில் இறுதி உடன்பாடு ஏற்படுவதில் இழுபறி நீடித்து வருகிறது. இதற்கு இடையே, லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதை கண்டித்து அந்த நாட்டின் மீது நேற்று முன் தினம் ஈரான் ஏவுகணை தாக்குதலை நடத்தியது. இதற்கு இஸ்ரேலும் பதிலடியாக தெஹ்ரான் உள்ளிட்ட நகரங்களை குறிவைத்து பதில் தாக்குதலை நடத்தியது. திருப்பி தாக்க வேண்டாம் என்ற அமெரிக்காவின் அறிவுறுத்தலையும் மீறி இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. இதனால், மீண்டும் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது.