விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறையை முன்னிட்டு ஆம்னி பஸ்களில் கட்டணம் பல மடங்கு உயர்வு: பயணிகள் கடும் அவதி!
சென்னை: விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறையை முன்னிட்டு, சென்னையில் தங்கி வேலை செய்பவர்களும், மாணவர்களும் தங்களது சொந்த ஊர்களுக்குத் திரும்பத் திட்டமிட்டுள்ளனர். இதனைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட ஆம்னி பேருந்து நிறுவனங்கள், கட்டணத்தை பல மடங்கு உயர்த்திக் கொள்ளையடிக்கத் தொடங்கியுள்ளன.
வருகிற செப்டம்பர் 14-ந் தேதி திங்கட்கிழமை விநாயகர் சதுர்த்தி வருவதால், சனி, ஞாயிறு, திங்கள் என 3 நாட்கள் தொடர் விடுமுறையாகிவிடுகிறது. இதனால், பெரும்பாலான மக்கள் இன்று (வெள்ளிக்கிழமை) தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட உள்ளனர். இதனால், சென்னையில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு செல்லும் ஆம்னி பஸ்களில் கட்டணம் 4 மடங்கு வரை கட்டணம் அதிகரித்து உள்ளது. வழக்கமாக பெங்களூரில் இருந்து கோவைக்கு 650 ரூபாயாக இருக்கும் பேருந்து டிக்கெட் கட்டணம், இந்த விநாயகர் சதுர்த்தி விடுமுறையை முன்னிட்டு தற்போது 3,200 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், வழக்கமான நாட்களில் சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு 750 ரூபாய் முதல் 1,000 ரூபாய் வரை விற்கப்பட்ட டிக்கெட்டுகள், தற்போது 2,000 ரூபாய் முதல் 3,000 ரூபாய் வரை விற்கப்பட்டு வருகின்றன.