பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம்
பிகாரில் நடைபெற்ற மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக செய்தி வெளியாகியிருக்கும் நிலையில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக பிகாரில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சனிக்கிழமை மாணவர் அமைப்புகள் போராட்டம் நடத்தியது.
பாட்னா காந்தி மைதானத்தில் நடந்த போராட்டத்தில் காவல்துறை மற்றும் மாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்டதாகவும், இதனைத் தொடர்ந்து, மாணவர்களுக்கு எதிராக ஏகே-47 ரக துப்பாக்கியை காவல்துறையினர் பயன்படுத்தியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. காவல்துறையின் தாக்குதலில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களை பிகார் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் நேற்று நேரில் சந்தித்திருந்தார். இந்த நிலையில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில் தெரிவித்திருப்பதாவது: ”அரசின் ஒட்டுமொத்த அமைப்பும் மாணவர்களுக்கு எதிராக அப்பட்டமான கொலைவெறியைக் கொண்டுள்ளது. பிகாரில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது ஏகே - 47 ரகத் துப்பாக்கிக் குண்டுகள் சுடப்பட்டதாகவும், நூற்றுக்கணக்கான மாணவர்கள் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது முதல் தகவல் அறிக்கைகள்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வருகின்றன.
மாணவர்கள் மீது முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்படாது, அவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்ற மோடியின் வாக்குறுதி எங்கே போனது? மாறாக, அவர்கள் மீது கொடிய தாக்குதல்களும் மிருகத்தனமும் கட்டவிழ்த்து விடப்படுகின்றன. தில்லியில் மாணவர்கள் மீது பெல்லட் துப்பாக்கிகளும், பீகாரில் ஏகே-47 ரகத் துப்பாக்கிகளும் சுடப்பட்டன. உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், பிகார் மற்றும் தில்லி என அனைத்து இடங்களிலும் இதே நிலைதான். நான் முன்பே கூறியுள்ளேன், இந்த அரசாங்கம் நேர்மையற்றது. உண்மையான சீர்திருத்தம் செய்வது அவர்களின் திறனுக்கு அப்பாற்பட்டது. அவர்கள் தங்கள் வார்த்தைகளிலிருந்து பின்வாங்கி, மாணவர்களின் குரல்களை அடக்க அனைத்து தந்திரங்களையும் பயன்படுத்துவார்கள்.
மோடி, நாட்டின் மாணவர்களிடம் மன்னிப்புக் கேளுங்கள். மேலும், மாணவர்களைத் தாக்கி நசுக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள். மாணவர்கள் மீது அல்ல” என்று குறிப்பிட்டுள்ளார். முன்னதாக, கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினரின் போராட்டத்தில் மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு யார் ஒப்புதல் அளித்தது எனக் கேள்வியெழுப்பி மத்திய அமைச்சர் அமித் ஷாவுக்கு ராகுல் காந்தி ஞாயிற்றுக்கிழமை கடிதம் எழுதியது குறிப்பிடத்தக்கது.