சீமான் ஷாக்..! நாதகவிலிருந்து இயக்குநர் மு.களஞ்சியம் திடீர் விலகல்..
நாதகவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு நாம் தமிழர் கட்சியின் முக்கிய முகங்களில் ஒருவரும், பிரபல திரைப்பட இயக்குனருமான மு. களஞ்சியம் எழுதியுள்ள உருக்கமான கடிதத்தில், மாற்று அரசியலை முன்னெடுப்பதாகக் கூறிக்கொண்டு தனிநபர்கள் மீது தரம் தாழ்ந்த விமர்சனங்களை வைப்பது தனக்கு மிகுந்த மனவருத்தத்தை அளிப்பதாக களஞ்சியம் குறிப்பிட்டுள்ளார். மேடைகளிலும் சமூக வலைத்தளங்களிலும் தம்பிகள் என்றழைக்கப்படும் நாதக தம்பிகள் மற்றும் நிர்வாகிகள் செய்யும் வெறுப்பரசியலை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், மாற்று கருத்துடையோரை நாகரீகமற்ற முறையில் விமர்சிப்பது கட்சியின் நோக்கத்தையே சிதைப்பதாக அவர் பகிரங்கமாக சாடியுள்ளார்.
மேலும், இதுபோன்ற தரம் தாழ்ந்த வெறுப்பரசியல் போக்குகளை கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டும் காணாமல் கடந்து செல்வது தனக்கு ஏமாற்றமளிப்பதாக களஞ்சியம் குற்றம் சாட்டியுள்ளார். கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் நீண்ட காலம் உழைத்தவர்களின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் தராமல், தன்னிச்சையான மற்றும் ஒருதலைப்பட்சமான போக்கில் முடிவுகள் எடுக்கப்படுவதாகவும், இதனை தட்டிக்கேட்க முடியாத சூழல் நிலவுவதாகவும் அவர் அதிருப்தி வெளியிட்டுள்ளார். கடந்த சில தேர்தல்களில் நாதகவின் முக்கிய வேட்பாளராகவும், கொள்கை பரப்பு முகமாகவும் செயல்பட்ட இயக்குனர் களஞ்சியத்தின் இந்த விலகல், கட்சிக்குள் நிலவும் உள்விவகாரங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. ஏற்கனவே சில முக்கிய நிர்வாகிகள் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படும் நிலையில், களஞ்சியத்தின் இந்த பகீர் புகார் மற்றும் விலகல் குறித்து சீமான் தரப்பில் இருந்து இதுவரை அதிகாரப்பூர்வமான விளக்கங்கள் எதுவும் அளிக்கப்படவில்லை. மேலும், கட்சியின் உறுப்பினர்களே சக கட்சியினர் மற்றும் ஆதரவாளர்கள் மீது வெறுப்பரசியலையும் இழிவான விமர்சனங்களையும் கையாள்வது, நாம் முன்னெடுக்கும் தமிழ்த்தேசிய பண்பாட்டிற்கு உகந்ததல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.