எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க ஜூலை 23 கடைசி நாள்: மருத்துவக் கல்வி இயக்குநரகம்
டெல்லி: எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க ஜூலை 23 கடைசி நாள் என்று மருத்துவக் கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது. நீட் மறு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் இதுவரை 41,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். இது தொடர்பாக மருத்துவக் கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; மாணவர்களின் நலன் கருதி, இளங்கலை மருத்துவப் படிப்புக்கான விண்ணப்பங்களுக்குத் தேவையான ஆவணங்களின் பட்டியலைத் தமிழ்நாடு மருத்துவச் சேர்க்கைக் குழு ஏப்ரல் 28-அன்று வெளியிட்டது; மேலும், மாணவர்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கப் போதுமான கால அவகாசம் அளிக்கும் வகையில் ஜூன் 29 முதல் விண்ணப்பப் பதிவு தொடங்கியது. இதுவரை, 41,000-க்கும் மேற்பட்ட பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் தமிழ்நாடு மருத்துவச் சேர்க்கைக் குழுவால் பெறப்பட்டுள்ளன. ஜூலை 16-அன்று நீட் (NEET) தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், விண்ணப்பப் பதிவுக்கான கால அவகாசம் மேலும் ஒரு வாரத்திற்குத் தொடர்ந்து நீடிக்கும்.
அனைத்து விண்ணப்பங்களையும் பரிசீலித்தல், தகுதியற்ற விண்ணப்பதாரர்களின் பட்டியலை வெளியிடுதல், அத்தகைய விண்ணப்பதாரர்களுக்கான குறைகளைத் தீர்க்கும் வாய்ப்பை வழங்குதல் மற்றும் DGHS-இன் இளங்கலை மருத்துவக் கலந்தாய்வுக்கான குறுகிய கால அட்டவணை ஆகியவற்றை கருத்தில் கொண்டு, விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி நீட்டிக்கப்படாது.எனவே, விண்ணப்பதாரர்கள் கடைசித் தேதிக்கு முன்னதாகவே தங்கள் விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.