Select Location
All Locations
State
Region
City / District
“முதுகில் குத்துபவர்களை சும்மா விடமாட்டோம்” - அதிருப்தி எம்பி-க்களுக்கு சஞ்சய் ராவத் எச்சரிக்கை

“முதுகில் குத்துபவர்களை சும்மா விடமாட்டோம்” - அதிருப்தி எம்பி-க்களுக்கு சஞ்சய் ராவத் எச்சரிக்கை

புதுடெல்லி: சிவ சேனா (யுபிடி) கட்சியை விட்டு வெளியே செல்ல விரும்பும் எம்பி, எம்எல்ஏக்கள் முதலில் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு செல்ல வேண்டும் என்றும் முதுகில் குத்துபவர்களை மகாராஷ்டிர மக்கள் இம்முறை சும்மா விட மாட்டார்கள் என்றும் அக்கட்சியின் மூத்த தலைவரும் மாநிலங்களவை எம்.பியுமான சஞ்சய் ராவத் எச்சரித்துள்ளார். உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவ சேனா (யுபிடி) கட்சியில் உள்ள எம்பி, எம்எல்ஏக்களை தங்கள் பக்கம் இழுக்க ஏக்நாத் ஷிண்டேவின் சிவ சேனா கடந்த சில வாரங்களாக முயன்று வருவதாக மகாராஷ்டிர அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. எம்எல்ஏக்களில் 16 பேரும், எம்பிக்களில் 7 பேரும் ஏக்நாத் ஷிண்டே உடன் தொடர்பில் இருப்பதாகவும், வரும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடருக்கு முன்பாக அவர்கள் சிவ சேனாவில் இணையக் கூடும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. சிவ சேனாவின் இந்த நடவடிக்கை, ஆபரேஷன் டைகர் என அழைக்கப்படுகிறது. இதனிடையே, ஜூன் 14 அன்று உத்தவ் தாக்கரே கூட்டிய அவசர ஆலோசனைக் கூட்டத்தில் மொத்தமுள்ள 9 மக்களவை உறுப்பினர்களில் 5 பேர் கலந்து கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், சிவ சேனா(யுபிடி) எம்பிக்களான அரவிந்த் சாவந்த், அனில் தேசாய் ஆகியோருடன் இணைந்து சஞ்சய் ராவத் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், “யாரேனும் செல்ல விரும்பினால் அவர்கள் பதவியை ராஜினமா செய்துவிட்டு செல்லட்டும். எங்கள் கட்சியின் எம்பிக்கள் குறித்து இதுபோன்ற செய்திகள் வருகின்றன. இதற்கு அவர்கள் விளக்கம் அளிக்க வேண்டும். முதுகில் குத்துபவர்களை மகாராஷ்டிர மக்கள் இம்முறை சும்மா விட மாட்டார்கள். இந்த எம்பிக்களின் வெற்றிக்காக எங்கள் கட்சித் தலைவர் ஓய்வின்றி உழைத்துள்ளார். இவர்களின் வெற்றியை உறுதிப்படுத்துவதற்காக நாங்கள் ரத்தம் சிந்தி உழைத்துள்ளோம்; தேர்தலின்போது பணம் கொடுத்துள்ளோம். இப்போது, இதுபோன்ற செய்திகள் வருகின்றன. நாங்கள் அவர்களை சும்மா விட மாட்டோம். எம்பிக்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.15 கோடி முன்பணமாகக் கொடுக்கப்பட்டுள்ளதாக எனக்கு தகவல் கிடைத்துள்ளது. குறைந்தது ரூ.50 கோடி கொடுக்கப்படும் என அவர்களுக்கு உறுதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த உத்தரவாதத்தை அடுத்தே அவர்கள் நான்டெட், புனே உள்பட மூன்று இடங்களில் இருந்து தனி விமானம் மூலம் சென்றுள்ளார்கள். இவர்கள் ரூ.50 ஆயிரத்துக்குக்கூட தகுதியானவர்கள் கிடையாது. சிவ சேனா என்ற பெயர் காரணமாகவே இவர்களுக்கு இவ்வளவு மதிப்பு. எங்கள் கட்சி சார்பில் கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றக் கட்சிக் குழு கூட்டத்தை நாளைய தினம் கூட்டியுள்ளோம். எங்கள் கட்சியின் கொறடா அரவிந்த் சாவந்த் இது தொடர்பாக மக்களவை சபாநாயகருக்கு கடிதம் எழுதியுள்ளார்,” என தெரிவித்துள்ளார்.


Hindu Tamil 1 hour ago
Home Flash News