Select Location
All Locations
State
Region
City / District
‘எங்களுக்கு கவலையில்லை’ - இந்திய கம்யூ. கூட்டணி விலகலுக்கு திமுக ரியாக்‌ஷன்

‘எங்களுக்கு கவலையில்லை’ - இந்திய கம்யூ. கூட்டணி விலகலுக்கு திமுக ரியாக்‌ஷன்

சென்னை: “எங்களுடன் கூட்டணியில் யார் இருந்தாலும், இல்லாவிட்டாலும் எங்களுக்கு கவலையில்லை. திமுக தனித்துவிடப்பட்டாலும் கவலையில்லை. எங்களுக்கு சொந்த பலம் இருக்கிறது” என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் கூறும்போது, “இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தற்போதைய சூழலில் திமுக கூட்டணியில் நீடிக்க முடியாது என மட்டுமே சொல்லி இருக்கிறது. எப்போதும் நீடிக்க முடியாது என சொல்லவில்லை. 10 ஆண்டுகளாக கூட்டணியில் இருந்து எங்களோடு பணியாற்றிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு நன்றி. திமுக தோன்றிய நாள் முதல், பல கட்சிகள் கூட்டணியில் இருந்தன. பின்னர், கூட்டணியை முறித்தும் சென்றிருக்கிறார்கள். எங்களுடன் கூட்டணியில் யார் இருந்தாலும், இல்லாவிட்டாலும் எங்களுக்கு கவலையில்லை. திடீரென ஒருநாளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஏற்பட்ட மனச் சங்கடம் குறித்து அவர்களிடம்தான் கேட்க வேண்டும். திமுக தனித்து விடப்பட்டாலும் கவலையில்லை. திமுகவுக்கு சொந்த பலம் இருக்கிறது.

வெளுத்தது எல்லாம் பால் என நம்பினோம். நாங்கள் 5 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்தபோது, கூட்டணி கட்சியினருக்கு தான் ‘தலைசால் தமிழர்’ பட்டம் வழங்கினோம். எங்கள் கட்சியினருக்கு கூட இதை தரவில்லை. நாங்கள் கூட்டணியை எந்த அளவுக்கு மதித்தோம் என்பதற்கு பல உதாரணங்களை சொல்ல முடியும்” என்றார். மேலும், “கூட்டணி கட்சிகள் கொள்கையோடுதான் வந்தனர். இப்போது கொள்கைதான் கேள்விக்குறியாக உள்ளது. என்ன மாற்றம் நடந்துவிட்டது, ஒரு மாதத்தில் அவர்கள் என்ன ஆட்சி செய்துவிட்டனர் என கூட்டணி கட்சிகள் மாறுகிறார்கள் எனத் தெரியவில்லை. இந்த ஒரு மாதத்தில் நாங்கள் என்ன தவறு செய்தோம் என அவர்கள் எங்களை விட்டு செல்கிறார்கள் என்றும் தெரியவில்லை” என்றார்.


Hindu Tamil 1 hour ago
Home Flash News