பொறியியல் கலந்தாய்வு: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!
தமிழகத்தில் பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க ஜூன் 5 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு, தனியார் பொறியியல் பல்கலை. கல்லூரிகளில் பி.இ., பி.டெக். இளநிலை பொறியியல் படிப்புகளின் அரசு ஒதுக்கீடு இடங்களில் சேருவதற்கான கலந்தாய்வுக்கு விண்ணப்பப் பதிவு இணையம் வழியாக நடைபெற்று வருகிறது.
கடந்த மே 3- ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த விண்ணப்பப் பதிவுகளில் இணைய வழி மூலம் இதுவரை 2.81 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் 2.17 லட்சம் கட்டணம் செலுத்தியுள்ள நிலையில், 1.84 லட்சம் பேர் சான்றிதழ் பதிவேற்றமும் செய்துள்ளனர். பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க நாளை(ஜூன் 2) கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து மாணவர்களின் நலன் கருதி, பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் ஜூன் 5 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும், மாணவர்களின் சந்தேங்களை தெளிவுபடுத்திக்கொள்ள மாநிலம் முழுவதும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விளையாட்டு வீரா் பிரிவின் கீழ் விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கான சான்றிதழ் சரிபாா்ப்பின் முதல் கட்டம், இன்று (ஜூன் 1) முதல் ஜூன் 9 வரை சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தின் விவேகானந்தா அரங்கத்தில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.