மாணவர்கள் பள்ளிக்கு பைக் ஓட்டி வந்தால் பறிமுதல்: பள்ளிக் கல்வித் துறை உத்தரவு
சென்னை: பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கை: பள்ளி மாணவர்கள் மோட்டார் வாகனங்கள் பயன்படுத்துவது குறித்து தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு ஆணையரகம் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளது. அதனடிப்படையில், பின்வரும் அறிவுரைகளை தலைமை ஆசிரியர்கள், அனைத்து மாணவர்களுக்கும் வழங்க முதன்மை கல்வி அலுவலர்கள் அறிவுறுத்த வேண்டும். அதன்படி, சாலை பாதுகாப்பு மன்றம் அனைத்து பள்ளிகளிலும் ஏற்படுத்த வேண்டும். இந்த மன்றத்துக்கு உடற்கல்வி ஆசிரியர்கள் தலைவராக இருந்து செயல்பட வேண்டும்.
காலை வழிபாட்டு கூடுகையில், ஒவ்வொரு நாளும் சாலை பாதுகாப்பு குறித்த ஒரு கருத்தை பகிர வேண்டும். என்சிசி, என்எஸ்எஸ், சாரணர் இயக்கம், இளஞ்செஞ்சிலுவை சங்க மாணவர்களுக்கு போக்குவரத்துக் காவல்துறை மூலம், சாலை விதிகள் குறித்த பயிற்சியும், போக்குவரத்தை சீர் செய்தலில் அவ்வப்போது ஈடுபடுத்தவும் செய்யலாம். தலைக்கவசம் அணிவதை வலியுறுத்தி, பேரணிகள், விழிப்புணர்வு நாடகங்களையும் நடத்த வேண்டும். மாணவர்கள் பள்ளிக்கு இரு சக்கர வாகனங்களில் வந்தால், வாகனத்தைப் பறிமுதல் செய்து பெற்றோரை அழைத்து தக்க அறிவுரை வழங்கி பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும். பள்ளிக்கு வெளியில் மாணவர்கள் இரு சக்கர வாகனங்களை ஓட்டி செல்வதை தடுக்க தேவையான அறிவுரைகளை காலை வணக்க கூட்டத்தில் வழங்குதல் வேண்டும்.