ஏஐ மூலம் சித்திரிக்கப்பட்ட புகைப்படங்கள் வைரல்: ருக்மிணி வசந்த் புகார்
செயற்கை நுண்ணறிவு மூலம் சித்திரிக்கப்பட்ட புகைப்படங்கள் பரப்பப்படுவதாக நடிகை ருக்மிணி வசந்த் புகார் அளித்துள்ளார். நடிகை ருக்மிணி வசந்த், தன்னைப் போன்ற புகைப்படங்களை செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் சித்திரித்து சமூக ஊடகங்களில் பரப்பப்படுவதாக புகார் அளித்துள்ளார். மேலும், டீப்ஃபேக் உதவியுடன் உருவாக்கப்பட்டு சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வரும் புகைப்படங்கள் முற்றிலும் சித்திரிக்கப்பட்டவை என்றும் அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவித்திருப்பதாவது, என்னுடைய படம் என்று கூறி, இணையத்தில் சில ஏஐ புகைப்படங்கள் பரப்பப்படுவதாக நான் கண்டறிந்தேன். இந்தப் படங்கள் முற்றிலும் போலியானவை மற்றும் சித்திரிக்கப்பட்டவை. இதுபோன்ற சித்திரிக்கப்பட்ட படங்களை உருவாக்குவதும் பரப்புவதும் தனியுரிமை மீதான கடும் மீறலாகும். இந்த விஷயத்தை நாங்கள் தீவிரமாக எடுத்துக் கொள்வதுடன், இந்தப் படங்களை உருவாக்கிப் பரப்பியவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளோம் என்று கூறியுள்ளார்.
சமீபகாலமாக டீப்ஃபேக் என்ற செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் மூலம் நடிகைகள் உள்ளிட்ட பிரபலங்களை போன்று சித்திரிக்கப்பட்ட படங்களைப் பரப்பி வருவது அதிகரித்து வருகிறது.