Select Location
All Locations
State
Region
City / District
ஒரே ஐபிஎல் சீசனில் அதிக சிக்ஸர்கள் - கெயில் சாதனையை நெருங்கும் வைபவ் சூர்யவன்ஷி

ஒரே ஐபிஎல் சீசனில் அதிக சிக்ஸர்கள் - கெயில் சாதனையை நெருங்கும் வைபவ் சூர்யவன்ஷி

ஜெய்ப்பூர்: ஒரே ஐபிஎல் சீசனில் அதிக சிக்ஸர்கள் விளாசிய வீரர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ள கிறிஸ் கெயில் சாதனையை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி நெருங்கி உள்ளார். நடப்பு ஐபிஎல் சீசனில் செவ்வாய்க்கிழமை அன்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (எல்எஸ்ஜி) மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான் சிங் மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட் செய்த எல்எஸ்ஜி அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 220 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, 221 ரன்கள் இலக்கை 19.1 ஓவர்களில் எட்டியது. அந்த அணி சார்பில் வைபவ் சூர்யவன்ஷி 38 பந்துகளில் 93 ரன்கள் எடுத்தார். 7 ஃபோர்கள் மற்றும் 10 சிக்ஸர்கள் அவரது இன்னிங்ஸில் அடங்கும். ஜெய்ஸ்வால், 23 பந்துகளில் 43 ரன்கள் எடுத்தார். துருவ் ஜூரெல், 38 பந்துகளில் 53 ரன்கள் எடுத்தார். 3 விக்கெட் இழப்புக்கு 225 ரன்கள் எடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி பெற்றது. இதன் மூலம் நடப்பு சீசனுக்கான பிளே ஆஃப் வாய்ப்பை அந்த அணி இன்னும் உயிர்ப்போடு வைத்துள்ளது.

இந்த ஆட்டத்தில் ஆட்ட நாயகன் விருதை வென்ற வைபவ் சூர்யவன்ஷி கூறியது: “எங்கள் அணி பந்து வீசிய போது நான் டக்-அவுட்டில் அமர்ந்திருந்தேன். அப்போது ஆடுகளம் சிறப்பாக இருந்ததை கவனித்தேன். இன்னிங்ஸின் தொடக்கத்தில் அவசரப்படாமல் சற்று நேரம் எடுத்து ஆட வேண்டுமென நினைத்தேன். நான் நீண்ட நேரம் விளையாடுவது எதிர்முனையில் உள்ள பேட்ஸ்மேனுக்கு உதவும் என கருதினேன். அதுதான் எனது மைண்ட் செட். எனது கரியரில் நான் நீண்ட நாட்கள் விளையாடினால் என்னைப் பற்றி இன்னும் பல விஷயங்கள் மக்கள் பேசுவார்கள். எனது கவனம் எல்லாம் கிரிக்கெட் விளையாட்டின் மீதுதான் உள்ளது என்றார். இப்போது ஒரே ஐபிஎல் சீசனில் 50+ சிக்ஸர்கள் விளாசிய இந்தியர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். இதோடு ஒரே சீசனில் அதிக சிக்ஸர்கள் விளாசியவர் என அறியப்படும் கிறிஸ் கெயிலின் சாதனையையும் அவர் நெருங்கி வருகிறார்.


Hindu Tamil 21 days ago
Home Flash News