“தொகுதி மறுவரையறையால் தமிழகத்துக்கு பாதிப்பு இருக்காது; மத்திய அரசு உறுதியளித்துள்ளது” - இபிஎஸ்
சென்னை: “தொகுதி மறுவரையறையால் தமிழகம் உட்பட எந்த மாநிலமும் பாதிக்கப்படாது என மத்திய அரசு உறுதியளித்துள்ளது" என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கோயம்புத்தூர் தெற்கு சட்டப்பேரவைத் தொகுதியில் எடப்பாடி கே. பழனிசாமி சித்தாபுதூர் வி.கே.கே மேனன் சாலை அருகில் சாலை வலம் வந்து பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசும்போது, “தொகுதி மறுவரையறையால் பாதிப்பு இருக்காது என மத்திய அரசு உறுதியளித்துள்ளது. தமிழகம் உட்பட எந்த மாநிலமும் பாதிக்கப்படாது என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். மக்கள் மகிழ்ச்சியடையும் வகையில் தொகுதி மறுவரையறை இருக்கும்.
மகளிருக்கு 33 % இட ஒதுக்கீடு கிடைக்காமல் தடுக்கவே ஸ்டாலின் தொகுதி மறுவரையறையை எதிர்க்கிறார். பெண்கள் மத்தியில் மத்திய அரசுக்கு நல்ல பெயர் கிடைத்துவிடும் என நினைக்கிறார். பல வருடங்கள் மத்தியில் அமைச்சராக இருந்தவர் ப. சிதம்பரம். நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் தமிழ்நாட்டுக்கு என்ன கொண்டு வந்துள்ளார்?, எங்களைப் பற்றி பேச ப.சிதம்பரத்துக்கு என்ன தகுதி இருக்கிறது? மத்திய அரசு கூறிய கருத்தை தான் நான் தெரிவித்தேன். தொகுதி மறுவரையறை விவகாரத்தில் ஸ்டாலின் டபுள் கேம் ஆடுகிறார்.
கோவை மக்கள் உஷாரான மக்கள். இங்கு எங்கேயுமே கருப்புக்கொடி இல்லை. ஸ்டாலினுக்கு தோல்வி ஜுரம் வந்துவிட்டது. அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு பொய் வழக்குப் போட்ட அதிகாரிகள் யாராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ” என்று பழனிசாமி தெரிவித்தார்.