மதுரை அதிமுகவில் மும்மூர்த்திகளின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் தேர்தல்!
மதுரை: மதுரை அதிமுகவில் செல்வாக்கு மிக்கவர்களாகத் திகழும் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், அமைப்புச் செயலாளர் ராஜன் செல்லப்பா ஆகியோருக்கு இந்த சட்டப்பேரவைத் தேர்தல் அவர்களது அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் தேர்தலாக உள்ளது. மதுரை மாவட்ட அதிமுகவில் மாநகர் செயலாளர் செல்லூர் ராஜூ, புறநகர் மேற்கு மாவட்டச் செயலாளர் ஆர்.பி.உதயகுமார், புறநகர் கிழக்கு மாவட்டச் செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா ஆகியோர் அதிகார பலமும், செல்வாக்குமிக்கவர்களாகவும் உள்ளனர். கடந்த 15 ஆண்டுகளாக, அதிமுக ஆட்சியில் இருக்கிறதோ, இல்லையோ இவர்கள் மூவரும் அதிகாரத்தில் இருந்தனர். 2011 முதல் 2016 வரையிலான அதிமுக ஆட்சியில் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் அமைச்சர்களாகவும், வி.வி.ராஜன் செல்லப்பா மதுரை மேயராகவும் இருந்தனர். 2016 முதல் 2021 வரை செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் மீண்டும் அமைச்சர்களாகவும், விவி.ராஜன் செல்லப்பா வடக்குத் தொகுதி எம்எல்ஏ-வாகவும் இருந்தனர்.
கடந்த 2021 முதல் தற்போது வரை அதிமுக எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தாலும் செல்லூர் ராஜூ, வி.வி.ராஜன் செல்லப்பா ஆகியோர் எம்எல்ஏ-வாகவும், அக்கட்சியில் அதிகாரமிக்க மாவட்டச் செயலாளர்களாகவும் உள்ளனர். ஆர்.பி.உதயகுமார், மாவட்டச் செயலாளராக மட்டுமின்றி ஜெ.பேரவை மாநிலத் தலைவர், சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவராகவும் உள்ளார். இப்படி அதிமுக எதிர்க்கட்சி, ஆளும்கட்சியாக இருந்தாலும் மூவரும் கட்சி, ஆட்சி இரண்டிலும் அதிகார மையங்களாகவே உள்ளனர். இந்நிலையில் இந்த சட்டப்பேரவைத் தேர்தலிலும் மூவரும் எதிர்பார்த்தபடியே, அவர்கள் விரும்பியபடியே போட்டியிட அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி வாய்ப்பை வழங்கியுள்ளார்.