அரசு அதிகாரி தற்கொலையால் சர்ச்சை: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜினாமா
அரசு அதிகாரி தற்கொலை சர்ச்சையால் பஞ்சாப் மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் லால்ஜித் சிங் புல்லர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அமிர்தசரஸில் உள்ள அரசு கிடங்கு நிறுவன மேலாளர் ககன்தீப் சிங் ரந்தாவா, கடந்த வெள்ளிக்கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலைக்கு முன் ககன்தீப் பதிவு செய்த வீடியோவில், பேசும் ரூ.10 லட்சம் லஞ்சம் வாங்கிக்கொண்டு அமைச்சர் லால்ஜித் சிங் உதவியாளருக்கு சாதகமாக டெண்டரை வழங்குமாறு தான் வற்புறுத்தப்பட்டதாகவும், ஆனால் சட்டப்படி வேறு ஒருவருக்கு வழங்கியதால் அமைச்சரின் இடத்திற்கு அழைக்கப்பட்டு தான் தாக்கப்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். தன் மீதான குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதாரமற்றவை என்று லால்ஜித் சிங் புல்லர் தெரிவித்துள்ளார். இருப்பினும், விசாரணை முடியும் வரை பதவியில் நீடிக்க விரும்பவில்லை எனக் கூறி ராஜினாமா கடிதத்தை அளித்துள்ளார். முதல்வர் பகவந்த் மான் கோரியதை அடுத்து அமைச்சர் பதவி விலகியதாக கூறப்படுகிறது. இந்த விவாகரத்தில் எதிர்க்கட்சிகள் பஞ்சாப் அரசை விமர்சித்து வருகின்றனர்.