போட்டித் தேர்வில் வெற்றி பெற்ற 4,010 பேருக்கு பணி நியமன ஆணை வழங்க மறுப்பது நியாயமல்ல: அன்புமணி
சென்னை: சுகாதார ஆய்வாளர்கள், கூட்டுறவு உதவியாளர் பணிக்கான போட்டித் தேர்வில் வெற்றி பெற்ற 4,010 பேருக்கு பணி நியமன ஆணை வழங்க வேண்டும் என தமிழக அரசை பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாடு அரசின் மருத்துவப் பணியாளர்கள் தேர்வு வாரியத்தின் சார்பில் 1429 சுகாதார ஆய்வாளர்களை தேர்வு செய்வதற்காக நடத்தப்பட்ட போட்டித் தேர்வின் முடிவுகள் வெளியிடப்பட்டு, சான்றிதழ் சரி பார்ப்பும் முடிவடைந்து விட்ட நிலையில், இன்று வரை அவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்படவில்லை. பல ஆண்டு காத்திருப்புக்கு பின்னர் அரசு வேலைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகும் கூட அவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்க மறுப்பது நியாயமல்ல.
தமிழ்நாடு அரசின் மருத்துவத் துறைக்கு 1429 சுகாதார ஆய்வாளர்களை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கை கடந்த ஆண்டு அக்டோபர் 27-ம் தேதி வெளியிடப்பட்டு, அதனடிப்படையில் விண்ணப்பித்தவர்களுக்கு கடந்த டிசம்பர் 7-ம் தேதி போட்டித் தேர்வு நடத்தப்பட்டு, அடுத்த சில வாரங்களில் முடிவுகள் வெளியிடப்பட்டன. அவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நிறைவடைந்து கடந்த 13-ம் தேதி பணி நியமன ஆணை வழங்கப்படவிருந்த நிலையில், கடைசி நேரத்தில் அது கைவிடப்பட்டது.
இதற்குக் காரணம் சுகாதார ஆய்வாளர் பணிக்கான போட்டித் தேர்வில் முறைகேடு நடந்ததாகக் கூறி உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள்தான் என்று கூறப்பட்டது. ஆனாலும், விசாரணையில் அது உண்மையில்லை என்று தெரியவந்ததையடுத்து அந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது. ஆனால், இதற்கு முன்பு நடந்த தேர்வில் தேர்ச்சி பெற்றும் பணி கிடைக்காமல் தற்போது தொகுப்பூதியத்தில் பணிபுரிபவர்கள், தங்களுக்கு பணி நியமனம் வழங்க வேண்டும் என புதிய வழக்கு தொடர்திருப்பதால் நியமன ஆணை வழங்க உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.