கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலய திருவிழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரம்
ராமேசுவரம்:
இந்தியாவின் தென் எல்லையான ராமேசுவரம் தீவிலிருந்து 22 நாட்டிக்கல் மைல் தொலைவில் மன்னார் வளைகுடா கடலில் இந்திய-இலங்கை எல்லையையொட்டி கச்சத்தீவு அமைந்துள்ளது. கடந்த 1974-ம் ஆண்டு வரை இந்தியாவுக்கு சொந்தமாக இருந்த இந்த தீவு பின்னர் இலங்கையுடன் ஏற்பட்ட ஒப்பந்தம் காரணமாக அந்த நாட்டிற்கு வழங்கப்பட்டது.
இந்த தீவில் உள்ள பிரசித்தி பெற்ற புனித அந்தோணியார் தேவாலயத்தில் ஆண்டுதோறும் பிப்ரவரி இறுதி அல்லது மார்ச் மாதம் முதல் வாரத்தில் திருவிழா நடைபெறுவது வழக்கம். 2 நாட்கள் நடக்கும் இந்த விழாவில் இந்திய-இலங்கையை சேர்ந்த பக்தர்கள் இணைந்து கலந்து கொள்வார்கள். விழாவில் இரு நாட்டு மக்களும் சகோதரத்துவத்துடன் சந்தித்து தாங்கள் கொண்டு வந்த பொருட்களை பரிமாற்றம் செய்வது வழக்கம்.