பாடல்களுக்கு உரிமை கோர இளையராஜாவுக்குத் தடை; டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி
அன்னக்கிளி திரைப்படத்தின் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமானவர் இளையராஜா. முதல் படத்திலேயே தனது இசையின் மூலமாக அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர். அதன் பிறகு அவர் இசையமைத்த அனைத்து பாடல்களுமே பட்டிதொட்டி எங்கும் பிரபலமானது. 1976 ல் தொடங்கிய இந்த இசைப் பயணம் இன்று வரை நீண்டு கொண்டே போகிறது. பல தசாப்தங்களாகத் தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக இருந்து வருகிறார்.
இவரது புகழ் தமிழ் சினிமாவையும் தாண்டி பரந்துபட்டதாக இருந்து வருகிறது. உலக அளவில் தனது இசை திறமையை வெளிப்படுத்தியவர் இவர். இவ்வளவு பெருமைகளையும் கொண்டுள்ள இவர், சமீப காலங்களில் சில சர்ச்சைகளில் சிக்கி வந்தது குறிப்பிடத்தக்கது. அது, இவரது பாடல்களைப் பிறர் பயன்படுத்தினால், அதற்குக் காப்புரிமை கேட்டு வந்தார். இது போன்ற செய்திகளும், அதனால் வரும் சர்ச்சைகளும் பல நேரங்களிலும் தொடர்ந்த வண்ணம் உள்ளன.
இதன் நீட்சியாக, 1976 முதல் 2001 வரையிலான, இவர் இசையமைத்த 134 திரைப்படங்களுக்கு இசை காப்புரிமை கோர தங்களுக்கு மட்டுமே உரிமை உள்ளதென சரிகம இசை நிறுவனம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில், “1957 ஆண்டு காப்புரிமை சட்டத்தின் படி, ஒரு படத்தின் இசைக்கு அந்த படத்தின் தயாரிப்பாளரே முதல் உரிமையாளர். அந்த வகையில், இந்த 134 திரைப்படப் பாடல்கள் அனைத்தும் முறைப்படி அந்தந்த தயாரிப்பாளர்களிடம் ஒப்பந்தம் செய்யப்பட்டு காப்புரிமை பெறப்பட்டுள்ளது.
இருப்பினும், இளையராஜா தரப்பு இந்த பாடல்கள் தனக்கே சொந்தம் என்று கூறி அமேசான், ஐ-மியூசிக் மற்றும் ஜியோசாவ்ன் போன்ற இணைய தளங்களில் பதிவேற்றியுள்ளது சட்ட விரோதமானது” என சரிகம தரப்பு வாதிட்டது.
இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட டெல்லி உயர் நீதிமன்றம், இணையதள பதிவேற்றத்திற்கு இடைக்காலத் தடை விதித்தது. மேலும், இளையராஜா மற்றும் அவர் சார்ந்த பிரதிநிதிகள் சரிகம வசம் உள்ள 134 படங்களின் பாடல்களைப் பயன்படுத்தவோ அல்லது உரிமை கோரவோ அல்லது மற்றவர்களுக்கு உரிமம் வழங்கவோ கூடாது. இந்த தடையை விதிக்கப்படாவிட்டால் சரிகம நிறுவனத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு ஏற்படும் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.