கருத்து ஊசி சரியாக போடப்பட்டதா? - ‘சர்தார் 2’ விமர்சனம்
கார்த்தி நடிப்பில் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் வெளியான சர்தார் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அந்த வெற்றியைத் தொடர்ந்து தற்போது இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் இதே கூட்டணியில் வெளியாகி இருக்கிறது. இந்த கூட்டணி முந்தைய பாகத்தில் கொடுத்த வெற்றியை இந்த பாதத்திலும் தக்க வைத்தார்களா, இல்லையா?
டோக்கு என்று சொல்லக்கூடிய மிகப்பெரிய பயோ ஆயுதம் ஒன்று நாட்டில் பல்வேறு மக்களை நோய்வாய்ப்பட செய்து அழிக்கிறது. அந்த ஆயுதத்தில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சை சரி கட்டும் விதமாக அதற்கு மருந்து கண்டுபிடித்து அந்த மருந்தை மக்களிடையே செலுத்துகின்றனர் ரா அதிகாரிகள் கார்த்தி அண்ட் மாளவிகா மோகனன் டீம். ஆனால் போதிய அளவு மருந்து கிடைக்காததால் பலர் இறக்க நேர்கிறது. இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான சர்தார் கார்த்தி தலைமறைவாகிறார். அந்த பயோ ஆயுதமும் கார்த்திக்கு தெரியாமல் டிஆக்டிவேட் செய்து மறைத்து வைக்கப்படுகிறது.
பிறகு மகன் கார்த்தியும் ராவில் பணிபுரிந்து வருகிறார். அப்பொழுது அந்த பழைய பயோ ஆயுதம் வில்லன் எஸ் ஜே சூர்யாவால் கைப்பற்றப்பட்டு மீண்டும் இந்த உலகத்தை அழிக்க திட்டம் தீட்டப்படுகிறது. இந்தத் திட்டத்தை எப்படியாவது முறியடிக்க வேண்டும் என மகன் கார்த்தி களத்தில் இறங்க ஒரு கட்டத்தில் நிலைமை கை மீறி போக தந்தை சர்தார் கார்த்தியும் நீண்ட இடைவெளிக்கு பிறகு கோதாவில் குதிக்கிறார். இதன்பின் வில்லன் எஸ் ஜே சூர்யா தான் நினைத்ததை செய்து இந்த உலகத்தை அழித்தாரா, இல்லையா? எஸ் ஜே சூர்யாவிடம் இருந்து பயோ ஆயுதத்தை கைப்பற்றி சர்தார் மற்றும் மகன் கார்த்தி ஆகியோர் அழித்தார்களா இல்லையா என்பதே இப்படத்தின் மீதி கதை.
மக்கள் அதிகம் பயன்படுத்தும் ஆன்டிபயாட்டிக் மாத்திரைகளால் ஏற்படும் விளைவுகளை மையமாக வைத்துக் கொண்டு அதனுள் பயோவார் மற்றும் ஸ்பை திரில்லர் ஆகிய கதையமைப்பை உட்புகுத்தி அதன் மூலம் உலகத்தரம் வாய்ந்த ஹாலிவுட் படம் போல் ஒரு திரைப்படத்தை கொடுக்க முயற்சி செய்திருக்கிறார் இயக்குநர் பி எஸ் மித்ரன். முதல் பாகத்தில் தண்ணீர் கேன் பிசினஸில் இருக்கும் மிகப்பெரிய ஸ்கேமை மக்களுக்கு வெளிக்கொண்டு வந்து அதன் மூலம் ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தி வெற்றி பெற செய்தார் இயக்குநர் பி எஸ் மித்ரன். ஆனால் இந்த பாகத்திலோ ஆண்டிபயாட்டிக் மருந்துகள் மூலம் மக்களுக்கு ஏற்படும் உடல் மாற்றங்களை விழிப்புணர்வாக கொடுக்க நினைத்து அதனுள் ஸ்பைத் திரில்லர் மற்றும் பயோ வார் போன்ற கதைகளை உட்பகுத்தி ஆக்சன் படமாக கொடுத்து அதன் மூலம் வெற்றி பெற முயற்சி செய்த பி எஸ் மித்திரனுக்கு சற்றே சறுக்கல் ஏற்பட்டு இருக்கிறது.
சொல்ல வந்த விஷயத்தை நேரடியாக சொல்லாமல் ஆங்காங்கே திரைக்கதை எங்கெங்கோ வழியில் பயணித்து பல்வேறு விதமான குழப்பங்களையும் கொடுத்து பார்ப்பவர்களுக்கு பல இடங்களில் அயர்ச்சியையும் சோர்வையும் கொடுத்திருக்கிறது. அதேபோல் படத்தின் நீளமும் 3 மணி நேரம் ஓடுவதும் படத்திற்கு பாதகமாக அமைந்திருக்கிறது. படத்தில் நடித்திருக்கும் கதாபாத்திரங்களும் அதற்காக இயக்குநர் உழைத்த விதமும் பாராட்டும் விதத்தில் இருந்தாலும் அதே சமயம் மேக்கிங்-கையும் உலகத்தரம் வாய்ந்த விதத்தில் உருவாக்கியதற்காகவும் பாராட்டுக்கள் கொடுத்தாலும் திரைக்கதையில் சற்றே சொதப்பி இருப்பது படத்திற்கு மைனஸ் ஆக அமைந்திருக்கிறது.
முதல் பாதி மிகவும் நீளமாகவும் ஆங்காங்கே வேகத்தடைகளுடன் நகர்ந்து இரண்டாம் பாகத்தில் இருந்து வேகம் எடுக்கும் திரைப்படம் விறுவிறுப்பாகவும் இறுதி கட்டத்தில் எஸ் ஜே சூர்யாவின் இன்வால்வ்மென்ட்க்கு பிறகு படம் சூடு பிடித்து இறுதிக்கட்டத்தில் விறுவிறுப்பான நல்ல ஸ்பை திரில்லர் பார்த்த படம் உணர்வை இந்த சர்தார் 2 கொடுத்து இருக்கிறது. இறுதிக்கட்டத்தில் இருந்த விறுவிறுப்பை படம் முழுவதும் கொடுத்து இருந்தால் இன்னமும் சிறப்பாக அமைந்திருக்கும்.