`மீனாட்சியம்மன் கோயில் அறங்காவலர் குழுவின் பெயரின்றி அழைப்பிதழ்; அச்சிட்டது யார்?' - உயர் நீதிமன்றம்
அறங்காவலர் குழு உறுப்பினர்களின் பெயர் இன்றி அழைப்பிதழை அச்சிட்ட அதிகாரி யார்? விவரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் இணை ஆணையருக்கு மதுரை அமர்வு உத்தரவு.
மீனாட்சியம்மன் திருக்கோவில் அறங்காவலர்களின் பெயர்கள், செயல் அலுவலரால் அச்சிடப்பட்ட திருக்கோவில் பத்திரிகையில் இடம்பெறவில்லை என டி.சுப்புலட்சுமி என்பவர் மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு நீதிபதி சி. சரவணன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.
விசாரணையின் போது அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர்கள் மற்றும் திருக்கோவிலின் வழக்கறிஞர் தரப்பு வாதத்தில்," திருக்கோவில் பத்திரிகையில் முதலமைச்சர் பெயர் முதல் வார்டு கவுன்சிலர் பெயர் வரை இடம்பெறுவது கோவிலின் புரோட்டோகால். ஆனால் கோவிலுக்காக நியமிக்கப்பட்ட அறங்காவலர்களின் பெயர்களை பத்திரிகையில் அச்சிடுவது புரோட்டோகால் அல்ல" என வாதிட்டனர்.
இதையடுத்து நீதிபதி, "அறங்காவலர் குழு உறுப்பினர்களின் பெயர் இன்றி அழைப்பிதழை அச்சிட்ட அதிகாரி யார்? அதற்கு அனுமதி அளித்த அதிகாரி யார்? என்பது தொடர்பான விவரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் இணை ஆணையருக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.