திருப்பதியில் செப்.15 முதல் 23ம் தேதி வரை வருடாந்திர பிரமோற்சவ விழா: இந்தாண்டு கூடுதலாக அக்டோபரில் பிரமோற்சவம்
திருமலை: திருப்பதியில் செப்டம்பர் 15ம் தேதி முதல் 23ம் தேதி வரை ஏழுமலையானுக்கு பிரம்மனே முன்னின்று நடத்தும் வருடாந்திர பிரமோற்சவ விழா நடைபெறுகிறது. இந்தாண்டு கூடுதலாக 2வது பிரமோற்சவம் அக்.12ல் தொடங்குகிறது. கலியுகத்தின் வாழும் தெய்வமாக விளங்கும் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டு முழுவதும் நடைபெறும் திருவிழாக்களில் பிரமோற்சவம் மிக முக்கியமானவை. இந்த ஆண்டு கூடுதல் மாதம் காரணமாக இரண்டு பிரம்மோற்சவங்களில் சாமி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளார். புராணங்களின்படி, வெங்கடாதிரியில் சீனிவாச பெருமாள் அவதரித்த ஆரம்ப நாட்களில் பிரம்மதேவனை அழைத்து, உலகின் நலனுக்காக தனக்கான உற்சவம் திருவிழாக்களை ஏற்பாடு செய்யுமாறு கட்டளையிட்டார்.
சுவாமியின் கட்டளைப்படி, பிரம்மதேவன் ஒன்பது நாட்கள் பிரமோற்சவங்களை நடத்தினார். புரட்டாசி மாதம் திருவோணம் நட்சத்திரத்தில் சீனிவாச பெருமாள் ஆனந்த நிலையத்தில் கோயிலில் அவதரித்ததால் பிரம்மன் முன்னின்று நடத்தும் பிரமோற்சவம், இந்த நாளில் நிறைவு பெறும் விதமாக அன்று முதல் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை தெலுங்கில் நட்சத்திர திதி அடிப்படையில் அதிக மாதங்கள் வரும்போது அந்த ஆண்டில் மட்டும் இரண்டு பிரமோற்சவம் நடத்தப்படுகிறது. சந்திர நாட்காட்டியின்படி புரட்டாசி மாதம் திருவோணம் நட்சத்திரத்தில் நிறைவு பெறும் விதமாக நடைபெறும் வருடாந்திர பிரமோற்சவமாகவும், தசரா நவராத்திரிகளில் நடைபெறுவது நவராத்திரி பிரமோற்சவமாகவும் நடத்தப்படுகின்றன.