Select Location
All Locations
State
Region
City / District
இஸ்ரோவில் அதிர்ச்சி: 100-க்கும் மேற்பட்ட மூத்த விஞ்ஞானிகள் திடீர் விலகல்!

இஸ்ரோவில் அதிர்ச்சி: 100-க்கும் மேற்பட்ட மூத்த விஞ்ஞானிகள் திடீர் விலகல்!

டெல்லி: 'ககன்யான்' உள்ளிட்ட முக்கிய விண்வெளித் திட்டங்களில் பணியாற்றி வந்த 100க்கும் மேற்பட்ட மூத்த விஞ்ஞானிகள் கடந்த ஓராண்டில் இஸ்ரோ அமைப்பிலிருந்து விலகியதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. விண்வெளித் திட்டங்கள் பாதிக்கப்படாமல் இருக்க, விஞ்ஞானிகளின் இந்தத் தொடர் வெளியேற்றத்தைத் தடுக்க, விருப்ப ஓய்வு மற்றும் ராஜினாமா விதிகளை கடுமையாக்கி ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த தகவல்களின்படி, இஸ்ரோவிலிருந்து கடந்த சில மாதங்களில் மட்டுமே 100 முதல் 120 விஞ்ஞானிகள் வரை விலகிள்ளனர். இஸ்ரோவில் உள்ள 14,600க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இந்த எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது ராஜினாமாக்களின் எண்ணிக்கை சிறியதாகத் தெரியலாம். ஆனால் ராஜினாமா செய்தவர்கள் அனைவரும் ககன்யான், சந்திராயன் உள்ளிட்ட திட்டங்களில் முக்கியமான பங்காற்றியவர்கள் என்பதுதான் கவலையளிக்கும் விஷயமாக மாறியுள்ளது. இதையடுத்து விஞ்ஞானிகளின் இந்தத் தொடர் விலகலால் நாட்டின் கௌரவமிக்க விண்வெளித் திட்டங்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்க இஸ்ரோ, ராஜினாமா விதிகளை மாற்றியமைத்துள்ளது. ககன்யான் உள்ளிட்ட தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களில் பணியாற்றும் 'குரூப் ஏ' விஞ்ஞானிகளின் விருப்ப ஓய்வு மற்றும் ராஜினாமா கோரிக்கைகளை இனிமேல் வழக்கமான முறையில் ஏற்றுக்கொள்ளக் கூடாது.

கடந்த 2020 நவம்பரில் கொண்டுவரப்பட்ட விதியின்படி, விஞ்ஞானிகளின் ராஜினாமா கடிதங்களை ஏற்கும் அதிகாரம் இஸ்ரோவின் அந்தந்த மையங்களின் இயக்குநர்களுக்கே வழங்கப்பட்டிருந்தது. அந்த அதிகாரம் பறிக்கப்பட்டு, அனைத்து ராஜினாமா விண்ணப்பங்களும் விண்வெளித் துறையின் (DoS) இறுதி முடிவுக்கே அனுப்பப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.


Dinakaran 1 hour ago
Home Flash News