மதுரையில் கெட்டுப்போன 1,200 கிலோ ஆட்டு இறைச்சி பறிமுதல்
மதுரை: மதுரை ஆரப்பாளையம் கிராஸ் ரோட்டில் கெட்டுப்போன 1,200 கிலோ ஆட்டு இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது. ஊசி மூலம் தண்ணீர் நிரப்பி ஆட்டுக்கறி மற்றும் கோழி இறைச்சியை விற்று வந்ததாக எழுந்த புகார் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மதுரை ஆரப்பாளையம் கிராஸ் ரோடு பகுதியில் மோயிசன் (57) என்பவர், மோயிசன் மட்டன் கடை நடத்தி வருகிறார். இவர் கெட்டுப்போன ஆடு மற்றும் கோழி இறைச்சியை விற்பனை செய்து வருவதாக உணவு பாதுகாப்பு துறைக்கு புகார் வந்துள்ளது. உணவு பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் சிவராம பாண்டியன் தலைமையில் அலுவலர்கள் ஆய்வு செய்தனர். ஊசி மூலம் தண்ணீர் நிரப்பி ஆட்டுக்கறி மற்றும் கோழி இறைச்சியை விற்று வந்ததாக புகார் தெரிவிக்கப்பட்ட நிலையில், கடையை பூட்டி சீல் வைத்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், ரூ.13,000 அபராதம் விதித்தனர். மேலும் ஊசிகள் பறிமுதல் செய்யப்பட்டு ஆய்வகத்திற்கு அனுப்பட்டதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.