Select Location
All Locations
State
Region
City / District
பழநி பஞ்சாமிர்தம் விலையை உயர்த்தக் கூடாது: விஷ்வ ஹிந்து பரிஷத் வலியுறுத்தல்

பழநி பஞ்சாமிர்தம் விலையை உயர்த்தக் கூடாது: விஷ்வ ஹிந்து பரிஷத் வலியுறுத்தல்

மதுரை: முருகனின் மூன்றாம் படை வீடான பழநியில் பக்தர்கள் விரும்பி பெருமளவு வாங்கும் பஞ்சாமிர்தம் விலையை உயர்த்தக் கூடாது. தரிசன கட்டணங்களையும் உயர்த்தக் கூடாது என விஸ்வ ஹிந்து பரிஷத் மாநில இணை பொதுச் செயலாளர் வழக்கறிஞர் சந்திரசேகரன் வலியுறுத்தியுள்ளார். மதுரையில் இது குறித்து பேசிய அவர், ”திருப்பதிக்கு அடுத்த படியாக பழநி முருகன் கோயிலுக்கு தினமும் பல்லாயிரக்காணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர் தமிழக அரசுக்கு வருவாய் ஈட்டித் தருவதில் பழநி முருகன் கோயில் முதலிடத்தில் உள்ளது. ஆனால் பழநியில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் கிடையாது.

கோடிக்கணக்கான வருவாய் ஈட்டி தரும் இக்கோயிலில் பக்தர்கள் மலைக்குச் சென்று வர கூடுதல் ரோப் கார், வின்ச் உள்ளிட்ட வசதிகளை நவீனப் படுத்தி விரிவாக்கம் செய்ய எந்த நடவடிக்கையும் தமிழக ஆட்சியாளர்கள் எடுக்கவில்லை. தமிழக வெற்றிக் கழக அரசு ஆட்சியில் பழநி பஞ்சாமிர்தம் கட்டணத்தை உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. அதுபோல தரிசனக் கட்டணங்களையும் உயர்த்த திட்டமிட்டு இதுகுறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்க அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். தமிழக அரசு உடனடியாக இந்த அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும். ஆயிரக்கணக்கான பக்தர்கள் விரும்பி வாங்கிச் செல்லும் முருகனின் பிரசாதமான பஞ்சாமிர்தத்தை மேலும் தரம் உயர்த்தி விலையை உயர்த்தாமல் வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும். மேலும் தரிசனக் கட்டணங்களையும் உயர்த்தக் கூடாது“ என்று வழக்கறிஞர் சந்திரசேகரன் கூறியுள்ளார்.


Hindu Tamil 1 hour ago
Home Flash News