இனி அண்ணாமலை vs விஜய்! பாஜகவிலிருந்து அமர் பிரசாத் ரெட்டி விலகல்!
பாஜக இளைஞர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுப் பிரிவு தலைவராக இருந்த அமர் பிரசாத் ரெட்டி, கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். தமிழகத்தில் பாஜக முன்னாள் தலைவராக இருந்த அண்ணாமலை கட்சியில் இருந்து விலகி 'இது நம்ம இயக்கம்' என்ற இயக்கத்தைத் தொடங்கியுள்ள நிலையில் பாஜகவில் இருந்து பலரும் விலகி வருகின்றனர்.
அந்தவகையில், பாஜக இளைஞர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுப் பிரிவு தலைவராக இருந்த அமர் பிரசாத் ரெட்டி, கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அவர் அண்ணாமலையின் புதிய இயக்கத்தில் இணைய உள்ளதாகக் கூறப்படுகிறது. "ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டில் திமுக இருக்கிறது என்றால், தமிழக பாஜக, 4 -5 பேரின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. தோல்வியடைந்தாலும் அவர்களேதான் மீண்டும் மீண்டும் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று நினைக்கிறார்கள். தமிழ்நாட்டில் பாஜகவை வளர்த்த அண்ணாமலைக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை" என்று அமர் பிரசாத் ரெட்டி குற்றம்சாட்டியுள்ளார். வருங்காலம் என்பது அண்ணாமலைக்கும் முதல்வர் விஜய்க்கும் இடையேதான் போட்டி இருக்கும் என்றும் அண்ணாமலை கண்டிப்பாக முதல்வராக வருவார் என்றும் கூறினார்.
தற்போது வரை அண்ணாமலை தொடங்கியுள்ள புதிய இயக்கத்தில் 17 லட்சத்துக்கும் அதிகமானோர் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.