அமெரிக்காவில் லாரி ஓட்டிய 30 இந்திய டிரைவர்கள் கைது; விரைவில் நாடு கடத்தல்: செக்மேட் ஆபரேஷன் மூலம் நடவடிக்கை
வாஷிங்டன்: அமெரிக்காவில் கடந்த சில காலங்களாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த லாரி டிரைவர்கள் சம்பந்தப்பட்ட உயிரிழப்புடன் கூடிய சாலை விபத்துகள் அதிகரித்து வந்தன. இதைத் தொடர்ந்து, தகுதியற்ற வெளிநாட்டு நபர்கள் அந்நாட்டில் வணிக ரீதியிலான கனரக வாகனங்களை இயக்குவதை தடுக்க டிரம்ப் தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்தது. விசா விதிமுறைகளை மீறி தங்கியிருப்பவர்களை கண்டறிந்து பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் வியூகம் வகுக்கப்பட்டு சோதனைகள் முடுக்கிவிடப்பட்டன.
இதன் தொடர்ச்சியாக, அரிசோனா மாகாணத்தின் யூமா செக்டார் பகுதியில் கடந்த மே 11ம் தேதி முதல் 15ம் தேதி வரை ‘ஆபரேஷன் செக்மேட்’ என்ற பெயரில் அமெரிக்க எல்லை பாதுகாப்பு போலீசார் அதிரடி வேட்டையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின் போது மொத்தம் 52 பேர் கைது செய்யப்பட்டனர். பிடிபட்டவர்களில் 36 பேர் அமெரிக்காவில் தங்குவதற்கு முறையான அனுமதி இன்றி சட்டவிரோதமாக கனரக வாகனங்களை இயக்கி வந்தது கண்டறியப்பட்டது. இதில் 30 பேர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற 6 பேர் மெக்சிகோ, எல் சால்வடார் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆவர். பிடிபட்டவர்களில் சிலரிடம் கலிபோர்னியா, நியூயார்க், வாஷிங்டன் மற்றும் வர்ஜீனியா போன்ற மாகாணங்களால் வழங்கப்பட்ட ஓட்டுநர் உரிமம் இருந்தது. இது குறித்து எல்லை பாதுகாப்பு அதிகாரி டஸ்டின் காடில் கூறுகையில், ‘தற்போது கைது செய்யப்பட்டுள்ள 30 இந்தியர்கள் உள்ளிட்டோர் விரைவில் நாடு கடத்தப்பட உள்ளனர்’ என்றார்.