Select Location
All Locations
State
Region
City / District
கொடைக்கானல் சுற்றுலாத் தலங்களை மே 31 வரை இலவசமாக பார்வையிடலாம்: திண்டுக்கல் ஆட்சியர் அறிவிப்பு

கொடைக்கானல் சுற்றுலாத் தலங்களை மே 31 வரை இலவசமாக பார்வையிடலாம்: திண்டுக்கல் ஆட்சியர் அறிவிப்பு

பழநி: தமிழக முதல்வர் விஜய்யின் உத்தரவுப்படி, கொடைக்கானலில் மே 31 வரை வனத்துறை சுற்றுலா இடங்களை இலவசமாக சுற்றி பார்க்கலாம் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள அனைத்து வனத்துறை சுற்றுலா இடங்களுக்கும் ஒரே இடத்தில் ‘க்யூஆர்’ குறியீடு மூலம் நுழைவு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த நடைமுறையால் பசுமை பள்ளத் தாக்கு பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், வனத்துறை சுற்றுலா இடங்களுக்கு அந்தந்த இடத்திலேயே தனியாக நுழைவு கட்டணம் வசூலிக்க வேண்டும் என வலியுறுத்தி, சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, கொடைக்கானலில் அதிகரித்து வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கருத்தில் கொண்டு வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா இடங்களுக்கு செல்ல 5 இடங்களில் நுழைவு சீட்டு (டிக்கெட்) பெறும் வசதி ஏற்படுத்தப்பட்டது. இருப்பினும், கோடை சீசனை முன்னிட்டு கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுகிறது. இதனால் சுற்றுலா இடங்கள் மட்டுமின்றி கொடைக்கானல் நகரிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் தமிழக முதல்வர் விஜய் உத்தரவின் படி, கொடைக்கானல் வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் போக்குவரத்தினை எளிதாக்கும் வகையில் வரும் மே 31 வரை வனத்துறை சுற்றுலா இடங்களை பயணிகள் இலவசமாக பார்வையிடலாம் என திண்டுக்கல் ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.


Hindu Tamil 44 minutes ago
Home Flash News