Select Location
All Locations
State
Region
City / District
திருச்சூர் வெடி விபத்து: விசாரணை ஆணையம் அமைத்தது கேரள அரசு

திருச்சூர் வெடி விபத்து: விசாரணை ஆணையம் அமைத்தது கேரள அரசு

திருச்சூர்: கேரள மாநிலம் திருச்சூர் அருகே பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 13 பேர் உயிரிழந்த நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக நீதிபதி சி.என்.ராமச்சந்திரன் நாயர் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது. கேரள மாநிலம் திருச்​சூர் மாவட்​டம் முண்​டத்​தி​கோடு பகுதி​யில் பட்​டாசுத் தொழிற்​சாலை உள்​ளது. திருச்​சூர் மாவட்​டத்​தில் ஆடிப்​பூரம் திரு​விழா மிக​வும் விமரிசையாக நடை​பெறும். அப்​போது வாண வேடிக்​கைகள் அதிக அளவில் நடை​பெறும். அதற்​காக இந்​தத் தொழிற்சாலையில் பட்​டாசு தயாரிக்​கும் பணி​கள் மும்​முரமாக நடை​பெற்று வந்​தன. நேற்று தொழிற்​சாலை​யில் 65-க்​கும் மேற்​பட்ட தொழிலா​ளர்​கள் வேலை பார்த்​துக் கொண்டிருந்​தபோது, ஆலை​யில் வெடி ​விபத்து ஏற்​பட்டு பட்​டாசுகள் வெடித்​துச் சிதறின. இதையடுத்து அங்​கிருந்த தொழிலா​ளர்​கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். இதில் 13 தொழிலாளர்கள் உடல் சிதறி சம்பவ இடத்​திலேயே உயிரிழந்​தனர். மேலும், 40 பேர் காயமடைந்து திருச்சூர் மருத்​து​வக்​ கல்​லூரி மருத்​து​வ​மனை​யில் சேர்க்கப்பட்டனர். திருச்​சூர் போலீ​ஸார் விசா​ரித்​து வருகின்​றனர்.

இதனிடையே, விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும் காயமடைந்தவர்களுக்கும் நிதி உதவியை மாநில அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பான அமைச்சரவை ஆலோசனைக் கூட்டம் கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்றது. இதையடுத்து முதல்வர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உடனடி நிதி உதவியாக தலா ரூ.14 லட்சம் வழங்கப்படும். இதில், மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ. 4 லட்சமும், முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ. 10 லட்சமும் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு பேரிடர் நிவாரண நிதியோடு முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.2 லட்சம் வழங்கப்படும். காயமடைந்தவர்கள் அரசு அல்லது தனியார் மருத்துவமனையில் பெறும் சிகிச்சைக்கான செலவை ஆறு மாதங்களுக்கு அரசே ஏற்கும். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக நீதிபதி சி.என். ராமச்சந்திரன் நாயர் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையம் விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ளும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, விபத்து நடந்த இடத்தை காங்கிரஸ் மூத்த தலைவர் சென்னிதாலாவுடன், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசன் நேரில் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வி.டி. சதீசன், “நடந்த சம்பவம் மிகுந்த வேதனையை ஏற்படுத்தி இருக்கிறது. இது ஒரு தீவிரமான பிரச்சினை. இது குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும். இது மிகவும் ஆபத்தான இடம் என்பதால், இங்கு முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் இருந்திருக்க வேண்டும். பாதுகாப்பு ஏற்பாடுகளில் ஏதேனும் குறைபாடுகள் இருந்ததா என்பது குறித்து நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும். விசாரணை ஆணையத்தின் அறிக்கை வந்த பிறகு அதன் அடிப்படையில் எதிர்காலத்தில் இதுபோன்ற ஒரு சம்பவம் நடக்காமல் இருப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும். கடந்த காலங்களில் இது தொடர்பாக நாங்கள் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தோம். ஆனால், துரதிருஷ்டவசமாக பல இடங்களில் அவை முறையாக செயல்படுத்தப்படவில்லை. கேரள அரசு பாதிக்கப்பட்ட மக்களுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய டிஜிபி ரவாடா சந்திரசேகர், “உயிரிழந்தவர்களில் 5 பேரின் உடல்கள், அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டன. இரண்டு உடல்கள் அடையாளம் காணப்பட வேண்டிய நிலையில் உள்ளன. இந்த சம்பவம் குறித்து விசாரிக்க ஒரு சிறப்பு புலனாய்வுக் குழுவை நாங்கள் அமைத்துள்ளோம். தீ விபத்துக்கான காரணம் குறித்து நாங்கள் விரிவாக ஆராய்வோம். விபத்து குறித்தும் அதில் பயன்படுத்தப்பட்ட வேதிப்பொருட்கள் குறித்தும் ஆய்வு செய்ய தடயவியல் குழு ஒன்றை நாங்கள் நியமித்துள்ளோம். விபத்தில் இருந்து உயிர் பிழைத்தவர்களிடமும் நாங்கள் விசாரணை நடத்த உள்ளோம். இந்த விசாரணையை முன்னெடுத்துச் செல்ல திருச்சூர் குற்றப்பிரிவு உதவி ஆணையரின் தலைமையில் மொத்தம் 18 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன” என தெரிவித்தார்.


Hindu Tamil 1 hour ago
Home Flash News