தமிழகத்தின் எம்.பி.க்கள் எண்ணிக்கை 59-ஆக உயரும்! – நாடாளுமன்ற மறுசீரமைப்பின் பலன்களைப் பட்டியலிட்ட அண்ணாமலை..!
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை முதுகுளத்தூரில் இருந்து புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வரை ஹெலிகாப்டரில் வந்த அவர் அறந்தாங்கி வேட்பாளர் கவிதா ஸ்ரீகாந்த் அவர்களை ஆதரித்து அறந்தாங்கியில் வாக்குகள் சேகரித்தார்.அதனைத் தொடர்ந்து புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி வேட்பாளர் இராமச்சந்திரன் அவர்களை ஆதரித்து புதுக்கோட்டை திலகர் திடலில் வாக்குகள் சேகரித்தார்.
அப்போது அவருடன் பரப்புரை வாகனத்தில் வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசுகையில் புதுக்கோட்டை திலகர் தியேட்டரில் எள் போட்டால் எண்ணையாக வந்துவிடும் என்ற அளவிற்கு கூட்டம் கூடி இருக்கிறது. ராமச்சந்திரன் வெற்றி பெற்றுவிட்டார் என்று தோன்றுகிறது. இங்கு புதுக்கோட்டைக்கு என்று எந்த திட்டத்தையும் கொண்டு வராத எம்எல்ஏ முத்துராஜா. வசூல்ராஜா முத்துராஜா. எந்தத் திட்டத்தையும் கொண்டு வராத, எதையும் செய்யாத இரண்டு அமைச்சர்கள். அந்த இரண்டு அமைச்சர்களாலும் எந்த பயனும் கிடையாது. புதுக்கோட்டைக்கு அரசு மருத்துவக் கல்லூரி, அரசு பல் மருத்துவக் கல்லூரி, துணைக்கோள் நகரம், ராணியார் ஆஸ்பத்திரி, பூங்கா, காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டம் என அனைத்தையும் கொண்டு வந்தது அதிமுக அரசு.
அதிமுக பாஜக கூட்டணியில் ஓர் எளிய இனிய இனிய வேட்பாளர் ராமச்சந்திரனை நிறுத்தி இருக்கிறது அவரை வெற்றி பெறச் செய்ய வேண்டும். இங்கிருக்கும் இளைஞர்கள் அனைவரையும் ஈர்த்திருக்கும் அண்ணாமலை அவர்கள் இளைஞர்களின் மாபெரும் சக்தியாக இங்கு வாக்கு சேகரிக்க வந்திருக்கிறார். அதிமுக ஆட்சியில் இருந்தபோது ஒரு நாள் விட்டு ஒரு நாள் தண்ணீர் வந்தது. ஆனால் இப்போது 15 நாட்களுக்கு ஒரு முறை தான் குடிதண்ணீர் வருகிறது. புதுக்கோட்டை மக்களுக்கு குடிதண்ணீர் கூட வழங்க முடியாத இரண்டு அமைச்சர்கள் ஒரு எம்எல்ஏ தேவையில்லை.
இன்னும் 20 நாள் பொறுத்திருங்கள். புதுக்கோட்டைக்கு எடப்பாடியார் அவர்கள் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மத்திய அரசின் உதவியுடன் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தை நிறைவேற்றித் தருவார். அதற்கு தம்பி ராமச்சந்திரன் துணை நிற்பார். நாம் கொண்டு வந்த திட்டங்கள் எதுவும் இப்போது சரியாக நடைபெறவில்லை. நாடு கஞ்சா போதையில் தள்ளாடுகிறது. நான் புள்ளி தான் வைத்திருக்கிறேன். அண்ணன் அண்ணாமலை நன்றாக கோலம் போடுவார் என்று அவரைப் பேச அழைத்தார்.