“உதயநிதியை ஒருபோதும் முதல்வர் வேட்பாளராக மக்கள் ஏற்க மாட்டார்கள்” - பியூஷ் கோயல்
ஊட்டி: “தமிழக கலாச்சாரம் மற்றும் பெண்களுக்கு எதிரான மனநிலை கொண்ட உதயநிதியை தமிழக மக்கள் ஒருபோதும் முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்,” என மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டம், ஊட்டி சட்டப்பேரவைத் தொகுதி பாஜக வேட்பாளர் போஜராஜனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் இன்று ஹெலிகாப்டர் மூலம் ஊட்டி வந்தார். ஊட்டியில் உள்ள தனியார் ஹோட்டலில், அவர் பல்வேறு தரப்பு சங்கங்கள் மற்றும் அமைப்புகளுடன் ஆலோசனை நடத்தினார்.
பின்னர், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறியதாவது; இந்தத் தேர்தல் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஒரு மிகப்பெரிய வெற்றியாக இருக்கும். எங்களது தலைமையின் கீழ் வரும் மே 4-ம் தேதி புதிய அரசு அமைந்து தமிழக மக்களுக்கு சேவை செய்யும். ஸ்டாலின் குடும்பத்தால் தமிழகத்தில் ஊழல் பெருகிவிட்டது. இது ஒரு சிறிய குடும்பம் அல்ல. மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், மருமகன் சபரீசன், சகோதரி கனிமொழி என ஒரே குடும்பத்தின் ஆட்சி இது. டாஸ்மாக் ஊழல், நில ஒதுக்கீடு ஊழல் என அனைத்துத் துறைகளிலும் ஊழல் மலிந்துவிட்டது. தமிழக இளைஞர்கள் ஒரு அரசு வேலையைப் பெறுவதற்குக் கூட லஞ்சம் கொடுக்க வேண்டிய நிலை உள்ளது. இது தமிழக மக்களால் ஏற்றுக் கொள்ள முடியாதது
தமிழக கலாச்சாரம் மற்றும் பெண்களுக்கு எதிரான மனநிலை கொண்ட உதயநிதி ஸ்டாலினை தமிழக மக்கள் ஒருபோதும் முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். நான் செல்லும் இடமெல்லாம் மக்கள் கோபமாக இருக்கிறார்கள். மு.க.ஸ்டாலின் உதயநிதியைத் துணை முதல்வராக்கிவிட்டு, இந்தத் தேர்தலுக்குப் பின் அவரை முதல்வராக்கத் திட்டமிட்டுள்ளார். இந்த ஒரு குடும்பத்தின் ஊழல் மற்றும் மோசமான ஆட்சி விரைவில் முடிவுக்கு வரும். அதிமுக, பாஜக, பாமக, ஏஎம்எம்கே, தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் இதர கூட்டணிக் கட்சிகள் ஒரு குடும்பமாக இணைந்து தமிழக மக்களுக்காக உழைக்கிறோம்.
இன்று நான் நீலகிரி மாவட்டத்தில் உள்ள இந்த அழகான ஊரில் இருக்கிறேன். எங்களது நீண்டகாலத் தொண்டர் போஜராஜன் இந்தத் தொகுதியில் 100% வெற்றி பெறுவார். அவர் 24 மணி நேரமும் மக்களுக்காக உழைக்கும் ஒரு அடிமட்டத் தொண்டர். எங்களது சகோதரர் வினோத் மற்றும் அதிமுக தொண்டர்களுடன் இணைந்து வெற்றிக்காகப் பாடுபடுகிறோம். தமிழகம் முழுவதும் இந்தக் கூட்டணி ஒற்றுமையாகச் செயல்படுவதால் வெற்றி நிச்சயம். மக்கள் திமுகவின் ஊழலை மறக்க மாட்டார்கள். அவர்களுக்கு ஒரு மாற்றம் தேவை, அந்த மாற்றத்தை அதிமுக தலைமையிலான கூட்டணி வழங்கும். இவ்வாறு அவர் கூறினார்.