“இலவசங்களை அறிவிக்கும் கட்சிகள் அதற்கான நிதி குறித்து விளக்க வேண்டும்” - வெங்கய்ய நாயுடு
சென்னை: இலவசங்களை அறிவிப்பவர்கள் அதற்கான நிதி குறித்து மக்களுக்கு விளக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள வெங்கய்ய நாயுடு, மக்களும் இது குறித்து கேள்வி எழுப்ப வேண்டும் என்று தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற குடியரசு முன்னாள் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், “ஒரு மனிதனுக்கு மீனை கொடுப்பதைவிட மீன் பிடிக்க கற்றக்கொடுக்க வேண்டும் என்ற ஒரு பழமொழி உண்டு. தொடர்ந்து இலவசங்களை கொடுத்துக்கொண்டே இருந்தால் மக்கள் மேலும் பலவற்றை எதிர்பார்க்கத் தொடங்குவார்கள். இதைத்தான் நான் நிகழ்ச்சியில் பேசும்போதும் தெரிவித்தேன். நான் எந்த ஒரு மாநிலத்தையும் குறிப்பிடவில்லை. இது நாடு முழுவதுமே நடக்கிறது
இதை கருத்தில் கொண்டு ஒவ்வொரு அரசும் மக்களின் கல்வி மற்றும் சுகாதாரத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அரசால் வழங்க முடியும் என்றால் இலவசங்களைக் கொடுக்கலாம். அதேநேரத்தில், இலவசங்கள் குறித்த வாக்குறுதிகளை அளிப்பது அது எந்த கட்சியாக இருந்தாலும், எந்த மாநிலமாக இருந்தாலும், எந்த அரசாங்கமாக இருந்தாலும் அவர்கள், அதற்கான நிதி ஒதுக்கீடு குறித்த திட்டத்துடன் வாக்குறுதிகளை அளிக்க வேண்டும். நிதிநிலை அறிக்கை இல்லாமல், மாநிலத்தின் நிதி நிலைமை குறித்த புரிதல் இல்லாமல் இன்னும் இன்னும் இலவசங்கள் அறிவிக்கப்படுமானால் மக்கள் கேள்வி எழுப்ப வேண்டும். அது எந்தக் கட்சியாக இருந்தாலும் அதனிடம் கேள்வி கேட்க வேண்டும். இலவசங்கள் அறிவிக்கிறீர்களே, அதற்கான நிதிக்கு என்ன செய்யப் போகிறீர்கள்? எவ்வாறு பட்ஜெட்டை திட்டமிடப் போகிறீர்கள்? எவ்வாறு நிதி திரட்டப் போகிறீர்கள்? என்ற கேள்விகளை மக்கள் கேட்க வேண்டும். இந்த விஷயத்தை நான் மிகவும் வலியுறுத்த விரும்புகிறேன்” என தெரிவித்தார்.