இந்தியாவில் மருந்து தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு.. அத்தியாவசிய மருந்துகளின் விலை உயரும் அபாயம்
மத்திய கிழக்கு போர் பதற்றம் காரணமாக, இந்தியாவில் மருந்துகளின் விலை கடுமையாக உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மருந்து உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருட்களின் விலை உயர்வு மற்றும் விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளே இதற்கு முக்கிய காரணங்களாகக் கூறப்படுகின்றன. இந்தியாவின் பெரும் பகுதி மருந்துத் தேவையை இமாச்சல பிரதேசம் பூர்த்தி செய்கிறது. இங்கு 500 க்கும் மேற்பட்ட மருந்து உற்பத்தி அலகுகள் செயல்படுகின்றன. இந்நிலையில் கடந்த 15 நாட்களில் மட்டும் மருந்து உற்பத்திக்கு தேவையான மூலப் பொருட்கள் மற்றும் வேதிப்பொருட்களின் விலை 200% முதல் 300% வரை அதிகரித்துள்ளதாக இமாச்சல பிரதேச மருந்து உற்பத்தியாளர்கள் சங்க (HDMA ) மாநில தலைவர் ராஜேஷ் குப்தா தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்படும் காய்ச்சல் மருந்தான பாராசிட்டமால் தயாரிக்கப் பயன்படும் மூலப்பொருளின் விலை, கிலோவிற்கு ரூ.250-லிருந்து ரூ.450 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல் நீரிழிவு, ரத்த அழுத்தம் மற்றும் சுவாசப் பிரச்சனைகளுக்காக மக்கள் தினசரி பயன்படுத்தும் ஜெனரிக் மருந்துகளின் விலை கணிசமாக உயரக்கூடும் என்று கணிக்கப்படுகிறது. மூலப்பொருட்கள், கரைப்பான்கள் மற்றும் பேக்கேஜிங் பொருட்களின் விலை உயர்வு இதே நிலை நீடித்தால், மருந்து உற்பத்தியைத் தொடரவது கடினம் என இமாச்சல பிரதேச மருந்து உற்பத்தி வட்டாரங்களில் கூறப்படுகிறது. தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் எல்பிஜி சிலிண்டர்களின் தட்டுப்பாடும் இந்த நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது. மருந்துத் துறையில் ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடியைத் தவிர்க்கவும், சுகாதாரத் துறை முடங்காமல் இருக்கவும் மத்திய சுகாதார அமைச்சகம் உடனடியாகத் தலையிட வேண்டும் என்று இமாச்சல பிரதேச மருந்து உற்பத்தியாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.