மதம் மாறினால் எஸ்சி/எஸ்டி சலுகைகள் ரத்து.. தீர்ப்பை உறுதி செய்த உச்சநீதிமன்றம்!
Supreme Court on Religious conversion: இந்து, சீக்கியம், பௌத்தம் அல்லாத வேறு மதத்தைப் பின்பற்றும் ஒருவர் பட்டியல் சாதியினருக்குக் கிடைக்கும் அரசியலமைப்பு சலுகைகளை கோர முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கிறிஸ்தவம் அல்லது பிற மதங்களுக்கு மாறுவதால் பட்டியலின பிரிவில் இருக்கும் மக்கள் அதற்கான தகுதியை இழப்பார்கள் என உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
கடந்த 2021ம் ஆண்டு ஆந்திரப்பிரதேச மாநிலம் குண்டூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிந்தாதா ஆனந்த் என்பவர் மதபோதகராக இருந்து வருகிறார். அவர் இந்து மதத்தில் இருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மாறியவர். இவர் மாநில உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில் சில நபர்கள் தான் செய்யும் நற்பணிகளை எதிர்த்ததாகவும், தன்னை தாக்கி சாதி ரீதியிலான இழிசொற்களைப் பயன்படுத்தியதாகவும் காவல்துறையில் புகார் அளித்தார்.
அதனடிப்படையில் குற்றவாளிகளை கைது செய்த போலீசார் அவர்கள் மீது எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான அக்கலா ராமி ரெட்டி, ஆனந்த் மதம் மாறிய நிலையில் அவர் எஸ்சி/எஸ்டி சட்டத்தைப் பயன்படுத்துவது சட்டப்படி ஏற்கத்தக்கது அல்ல என வாதிட்டார்.
மேலும் தங்கள் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என தெரிவித்தார். இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட ஆந்திரப்பிரதேச உயர்நீதிமன்றம், பட்டியலின மற்றும் பழங்குடியினர் சட்டமானது பாதுகாப்பு கட்டமைப்புகளுக்காக உருவாக்கப்பட்டது. வேறு மதத்திற்கு மாறுவதன் மூலம் அந்த பிரிவில் உள்ள சலுகைகளை ஒருவர் பயன்படுத்த முடியாது எனவும், இது சட்டத்தை தவறாக பயன்படுத்துவதற்கு சமம் எனவும் தெரிவித்தது.
இதனை எதிர்த்து ஆனந்த் உச்சநீதிமன்றத்தை நாடினார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிரஷாந்த் குமார் மிஸ்ரா மற்றும் மன்மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு ஆந்திரப்பிரதேச உயர் நீதிமன்றத் தீர்ப்பை உறுதிசெய்தது. பட்டியலினத்தைச் சேர்ந்த ஒரு நபர் தானாக முன்வந்து வேறு மதத்திற்கு மாறி அதனை தீவிரமாக பின்பற்றும் நிலையில் அவருக்கு வன்கொடுமைத் தடுப்பு) சட்டத்தின் கீழ் வழங்கப்படும் பாதுகாப்பு உட்பட, பட்டியல் சாதி அடையாளத்துடன் தொடர்புடைய சட்டப்பூர்வ உரிமைகள் செல்லுபடியாகாது என தெரிவித்தது.
ஒரு சாதிச் சான்றிதழ் இருப்பதை விட சம்பவம் நடந்த நேரத்தில் பாதிக்கப்பட்ட நபர் பின்பற்றும் மதமே தீர்மானிக்கும் காரணியாக உள்ளதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
இந்து, சீக்கியம் அல்லது பௌத்த மதம் அல்லாத வேறு மதத்தைப் பின்பற்றும் ஒருவர் பட்டியல் சாதியினருக்குக் கிடைக்கும் அரசியலமைப்புப் பாதுகாப்புகளைக் கோர முடியாது என தெரிவித்துள்ளது.
சாதி அமைப்பு கிறிஸ்தவ மதத்திற்கு அந்நியமானது என்றும், இந்து மதத்தின் சமூகக் கட்டமைப்பினால் உருவான சாதி அடிப்படையிலான பாகுபாட்டைக் கையாள்வதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு சட்டத்தின் பலனை தானாக முன்வந்து மதம் மாறிய ஒருவர் கோர முடியாது எனவும் தெரிவித்துள்ளது.