நெல்லையப்பர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் ஆண்டின் 12 மாதங்களிலும் விழாக்கள் நடைபெறுவது சிறப்பு ஆகும். அதில் ஒன்றாக பங்குனி மாதத்தில் பங்குனி உத்திர திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு பங்குனி உத்திர திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் விமரிசையாக தொடங்கியது. இதற்காக கோவில் நடை அதிகாலை திறக்கப்பட்டு பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
தொடர்ந்து கொடி பட்டத்திற்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு கோவில் வளாகத்தில் பல்லக்கில் ஊர்வலமாக எடுத்து வந்தனர். பின்னர் கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் வேத மந்திரங்கள் முழங்க, மேளதாளம் இசைக்க, பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
தொடர்ந்து கொடி மரத்திற்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மஞ்சள், பால், இளநீர் உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேக திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக வருகிற 25-ந்தேதி வேணுவனத்தில் வேணுவ நாதர் தோன்றிய வரலாற்று திருவிளையாடல் நிகழ்வும், வருகிற 31-ந்தேதி பங்குனி உத்திர செங்கோல் வழங்கும் விழாவும் நடைபெறுகிறது.