டாஸ்மாக் பணியாளர்கள் இன்று முதல் காத்திருப்பு போராட்டம்
சென்னை: பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், காலி பாட்டில் திரும்பப் பெறும் திட்டத்துக்கு டாஸ்மாக் பணியாளர்களை பயன்படுத்தாமல் மாற்று வழியில் நடைமுறைபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு கடந்த பிப்.1 முதல் 19-ம் தேதி வரை தொடர் காத்திருப்புப் போராட்டம் நடத்தியது.
பின்னர் அமைச்சர் முத்துசாமி, போராட்டக் குழுவை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதி அளித்தார். இதையடுத்து டாஸ்மாக் பணியாளர்களுக்கு ரூ.1000 ஊதிய உயர்வு உட்பட 5 அறிவிப்புகள் சமீபத்தில் வெளியிடப்பட்டன.
இந்நிலையில், இந்த அறிவிப்புகள் ஏமாற்றம் அளிப்பதாக அவர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். மேலும் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் இன்று முதல் டாஸ்மாக் மேலாண் இயக்குநர் அலுவலகம் அருகே காலவரையற்ற காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து டாஸ்மாக் பணியாளர்கள் கூறியதாவது: அமைச்சர் நடத்திய பேச்சுவார்த்தையின்போது ஒப்புக்கொண்ட விஷயங்களில், ஊதிய உயர்வு ரூ.1,000 என்ற ஒரு அறிவிப்பு மட்டும் இடம் பெற்றிருந்தது.
பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக மேலாண்மை இயக்குநர் தலைமையில் குழு அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், அறிக்கையில் குழு என்ற வார்த்தையே இடம்பெறவில்லை. இடைக்கால ஊதிய உயர்வாக ரூ.5,000 கேட்டிருந்தபோதிலும், ரூ.1000 தான் கொடுத்திருக்கிறார்கள்.
இந்நிலையில் எங்களுடைய கோரிக்கையை மறுபரிசீலனை செய்து, ஒப்புக்கொண்டபடி மாற்று அறிக்கையை வெளியிட வலியுறுத்தி இன்றுமுதல் தொடர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.