மின்வாரிய கணினி சேவை மேம்பாட்டுப் பணிகள்: சென்னையில் இன்றும், நாளையும் ஆன்லைன் சேவைகள் நிறுத்தம்
சென்னை: கணினி சேவை மேம்பாட்டுப் பணிகள் காரணமாக சென்னையில் இன்றும், நாளையும் (மார்ச் 7, 8) மின் கட்டணம் செலுத்துதல், மின் இணைப்பு விண்ணப்பம் உள்ளிட்ட ஆன்லைன் சேவைகள் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மின்வாரியம் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு மின்பகிர்மான கழகம், மின்நுகர்வோர்களுக்கு மேம்பட்ட சேவைகளை வழங்கும் நோக்கில், கணினி சேவைகளை புதிய சர்வர்களுக்கு படிப்படியாக மாற்றும் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த மேம்பாட்டுப் பணிகள் முதற்கட்டமாக சென்னை மண்டலத்தில் உள்ள சென்னை வடக்கு, சென்னை மத்தியம் மற்றும் சென்னை மேற்கு ஆகிய மின் பகிர்மான வட்டங்களில் செயல்படுத்தப்படுகின்றன.
இதன் காரணமாக, இன்று முதல் 8-ம் தேதி இரவு 12 மணிவரை 2 நாட்களுக்கு மின்கட்டணத்தை ஆன்லைன் மற்றும் மின்கட்டண வசூல் மையங்கள் மூலம் செலுத்தும் சேவைகள் மற்றும் புதிய மின் இணைப்பு விண்ணப்ப சேவைகள் ஆகியவற்றை சென்னை மண்டலத்துக்கு உட்பட்ட பெரம்பூர், வியாசர்பாடி, தண்டையார்பேட்டை, பொன்னேரி, எழும்பூர், தி.நகர், அண்ணாசாலை, மயிலாப்பூர், அம்பத்தூர், ஆவடி, அண்ணாநகர் ஆகிய கோட்டங்களுக்கு உட்பட்ட மின்நுகர்வோர் மற்றும் பொதுமக்கள் பெற இயலாது.
மேலும் நுகர்வோருக்கு 2 நாட்களுக்கு கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட்டு மார்ச் 9-ம் தேதி வரையில் அபராதம் இன்றி மின்கட்டணம் செலுத்த வசதி செய்யப்பட்டுள்ளது.
எனவே மேற்கண்ட பகுதிகளில் உள்ள நுகர்வோர் தங்களது மின்கட்டணங்களை செலுத்துவதற்கும் புதிய மின் இணைப்புக்கான விண்ணப்பம் உள்ளிட்ட சேவைகளையும் முன்கூட்டியே திட்டமிட்டு செயல்பட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.