அடுத்தடுத்து ராஜினாமா! சல்லி, சல்லியாய் நொறுங்கும் அதிமுக! என்னதான் செய்யப்போகிறார் எடப்பாடி பழனிசாமி?
அதிமுக-வில் அடுத்தடுத்து எம்எல்ஏ-க்கள் ராஜினாமா செய்து வரும் நிலையில், கட்சியின் பலம் குறையாமல் இருக்க எடப்பாடி பழனிசாமி என்ன செய்யப்போகிறார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழ்நாட்டின் அரசியல் களம் நாளுக்கு நாள் அனல்பறந்து வருகிறது. சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு இருந்ததைக் காட்டிலும் தற்போது மிகவும் பரபரப்பாக காணப்படுகிறது. தமிழ்நாட்டை சுமார் கால் நூற்றாண்டுகள் ஆட்சி செய்த அதிமுக தற்போது சறுக்கல் பாதையில் உள்ளது.
அடுத்தடுத்து ராஜினாமா செய்யும் அதிமுக எம்எல்ஏ-க்கள்:
ஜெயலலிதா மறைவு முதலே தொடர்ந்து சறுக்கலைச் சந்தித்து வரும் அதிமுக எடப்பாடி பழனிசாமி தலைமையில் சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் தோல்வியையே சந்தித்துள்ளது. இந்த தேர்தலில் வெறும் 47 எம்எல்ஏ-க்கள் மட்டுமே அதிமுக சார்பில் வெற்றி பெற்றனர்.
சிவி சண்முகம், எஸ்பி வேலுமணி தலைமையில் ஒரு அணியும், எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியும் செயல்பட்ட நிலையில், தவெக அமைச்சரவையில் இடம் கிடைக்காத சூழலில் எடப்பாடி பழனிசாமியை எதிர்த்த எம்எல்ஏ-க்கள் கவலைக்கு ஆளானார்கள்.
சல்லி, சல்லியாய் நொறுங்கும் அதிமுக:
சிலர் எடப்பாடி பழனிசாமி பக்கம் சாய்ந்த நிலையில், நேற்று திடீர் திருப்பமாக அதிமுக எம்எல்ஏ-க்களான சத்யபாமா, ஜெயக்குமார், மரகதம் தங்களது பதவியை ராஜினாமா செய்து தவெக-வில் இணைந்தனர். இந்த சூழலில், இன்று சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையா தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து இன்று தவெக-வில் இணைந்தார்.
அதிமுக-வில் ஒரு சீரற்ற சூழல் நிலவி வரும் சூழலில், அடுத்தடுத்து எம்எல்ஏ-க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்து ஆளுங்கட்சியான தவெக-வில் ஐக்கியமாகி வருவது அந்த கட்சியின் தொண்டர்களுக்கு வேதனையை உண்டாக்கியுள்ளது. சசிகலா, தினகரன், ஓ.பன்னீர்செல்வம் என ஒவ்வொரு பக்கமாக ஒவ்வொருவரும் சென்று தற்போது ஓ.பன்னீர்செல்வம் திமுக-வில் ஐக்கியமாகிய நிலையில், மற்ற இருவரும் தனிக்கட்சி தொடங்கிய நிலையில், இப்போது உட்கட்சி மோதலால் அதிமுக சல்லி சல்லியாக நொறுங்கி வருகிறது.
என்ன செய்யப்போகிறார் எடப்பாடி பழனிசாமி?
எடப்பாடி பழனிசாமி தலைமை மீது மிக கடுமையான விமர்சனங்களை பலரும் முன்வைத்து வரும் நிலையில், சொந்த கட்சி எம்எல்ஏ-க்களையே தக்கவைக்க இயலாத சூழலுக்கு அவர் ஆளாகியுள்ளார். பொதுக்குழுவை கூட்டி அவரது பொதுச்செயலாளர் பதவியை பறிக்க சிவி சண்முகம் தரப்பு முயற்சித்த நிலையில், சொந்த கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் அடுத்துடுத்து ராஜினாமா செய்வது மிகப்பெரிய தலைவலியை எடப்பாடி பழனிசாமிக்கு ஏற்படுத்தியுள்ளது.
தனது தலைமை குறித்த விமர்சனம், கட்சியை கட்டுக்கோப்பாக வைப்பது, எம்எல்ஏ-க்களை தக்கவைப்பது, வரவிருக்கும் 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பணியை தொடங்குவது என சவால்களை அவர் எவ்வாறு எதிர்கொள்ளப்போகிறார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.
தொடர் தேர்தல் தோல்விகளுக்கு மத்தியில் தனது தலைமைக்கு சவால் அளிக்கும் வகையில் அடுத்தடுத்து கட்சியில் காட்சிகள் அரங்கேறி வரும் சூழலில், எடப்பாடி பழனிசாமி என்ன செய்யப்போகிறார்? என்று அவரது ஆதரவாளர்கள் ஆவலுடன் காத்துள்ளனர்.