Select Location
All Locations
State
Region
City / District
/தவெக ஆட்சி | பேசுபொருளாகும் சட்டம் ஒழுங்கு.. கேள்விக் கணைகளைத் தொடுத்த எதிர்க்கட்சிகள்!

தமிழகத்தில் தவெக அரசு பொறுப்பேற்றபின் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன.

தமிழகத்தில் தவெக தலைமையிலான கூட்டணி அரசு பொறுப்பேற்ற கடந்த 15 நாட்களில், 40க்கும் மேற்பட்டகடுமையான குற்றச் சம்பவங்களும் சட்டம் ஒழுங்கு பிரச்னைகளும் நடந்துள்ளதாக, புதிய தலைமுறை செய்தியாளர்களின் ஆய்வில் தெரியவந்துள்ளது. இதையடுத்து சட்டம் ஒழுங்கு விவகாரம் பேசுபொருளாகி இருக்கும் நிலையில், எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் தமிழக அரசைக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்களை தடுக்க முதல்வர் விஜய் என்ன செய்யப்போகிறார் என்ற தமிழ்நாட்டின் கேள்விக்கு, நேரடியாக பதில் சொல்ல வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ள உதயநிதி ஸ்டாலின், இது தமிழ்நாடா அல்லதுஉத்தரப்பிரதேசமா என கேள்வி எழுப்பியுள்ளார். ’எங்கே போனது உங்க சிங்கப்பெண் அதிரடிப் படை’ என வினவியுள்ள அவர், ’தேர்தலுக்கு முன்பு வீரவசனங்களை பேசிய முதல்வர் விஜய், இப்போது ஏன் வாய் திறக்க மறுக்கிறார்’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார். ‘மக்கள் அச்சத்தில் தவிக்கும்போது, கண்துடைப்புக்காக கூட்டத்தை நடத்தி அறிக்கை விடுவதை ஏற்க முடியாது என்றும், நிலைமையின் தீவிரத்தை அரசு உணர வேண்டும்’ எனவும் உதயநிதி வலியுறுத்தியுள்ளார்.

அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி, இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலம் மடைமாற்று அரசியலை ஆளுங்கட்சி செய்து வருவதாக சாடியுள்ளார். பாலியல் தொல்லை, சிறுவன் வெட்டிப் படுகொலை, தேங்கியநீரில் உயிரிழந்த தம்பதி உள்ளிட்டசம்பவங்களை சுட்டிக்காட்டியுள்ள அவர், பொய்க்கால் குதிரை ஆட்சியிலும் ஏமாற்றமே மிஞ்சுவதாக தெரிவித்துள்ளார். செய்தியாளர் சந்திப்பு நடத்த முடியாத முதல்வர்தான் இப்போதும் வாய்த்துள்ளதாகவும் எடப்பாடி கே.பழனிசாமி சாடியுள்ளார். வாக்களித்த மக்கள் மீது கொஞ்சமாவது அக்கறை இருந்தால், சட்டம் ஒழுங்கை சீர்செய்யும் நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் எனவும் முதல்வர் விஜயை எடப்பாடிகே.பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாட்டில் சட்டம்- ஒழுங்கு கடுமையாக சீர்குலைந்துள்ளதை இந்த புதிய அரசு அறிந்துள்ளதா என்பதே சந்தேகமாக இருப்பதாக திமுக எம்.பி. கனிமொழி விமர்சித்துள்ளார். மதுரை மீனாட்சியம்மன் கோயில் அருகே சிறுவன் வெட்டிக் கொலை செய்யப்பட்ட செய்தி அதிர்ச்சி அளிப்பதாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர், விடிந்ததும் இதுபோன்ற செய்தியைக் கேட்க வேண்டிய நிலையில் தமிழ்நாடு இருப்பது வேதனை அளிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். குழந்தைகள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் என யாருக்கும் பாதுகாப்பில்லாத மாநிலமாக தமிழ்நாடு மாறிவிட்டதாகவும் கனிமொழி தெரிவித்துள்ளார்.

மதுரை சிறுவன்வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து அதிர்ச்சி தெரிவித்துள்ள பாஜக மூத்த தலைவர் அண்ணாமலை, குற்றவாளிகள் தடை இன்றி செயல்படுவதாகவும், தவெக அரசு இன்னும் கொண்டாட்டமான் நிலையிலேயே உள்ளதாகவும் சாடியுள்ளார்.

மரக்காணம் சிறுமிவன்கொடுமை சம்பவத்தைச்சுட்டிக்காட்டி, "தனது ஆட்சியில் நடக்கும் எந்தப் பிரச்னைகளையும் கண்டுகொள்ளாமல், முதல்வர் பதவியில் பொம்மைபோல அமர்ந்திருக்கும் விஜய்க்கு ஆள என்ன தகுதி இருக்கிறது” என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

"பெண்களுக்கு அரணாக இருப்பேன் என்ற முதல்வரின் வீரவசனம் என்ன ஆனது?" என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சாடியுள்ளார்.


Puthia Thalaimurai 47 minutes ago
Home Flash News