‘அம்மா’ வளர்த்த சேகர்பாபு இப்போது ‘அப்பா’வின் அடிமை: தமிழிசை விமர்சனம்
சென்னை: “அம்மா (ஜெயலலிதா) வளர்த்த சேகர்பாபு அப்பாவிடம் (ஸ்டாலின்) சென்று அடிமையானார்” என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “அமைச்சர் சேகர்பாபுவுக்கு எங்களைப் பற்றி பேச எந்த தார்மிக உரிமையும் கிடையாது. நான் அப்பா வளர்த்த பிள்ளை, எனக்கு மோடியை பிடிக்கும் என்பதால் தேசியத்தில் தஞ்சமடைந்தேன். அம்மா வளர்த்த சேகர்பாபு ‘அப்பா’விடம் சென்று அடிமையானார். அதனால் அவர் என் தந்தை பற்றியெல்லாம் பேசக்கூடாது. நான் எனது அப்பாவின் கட்சியில் இல்லை, வாரிசு அரசியலை எந்த விதத்திலும் பயன்படுத்திக் கொள்ளவில்லை.
நான் பாஜகவில் இணைந்து 27 ஆண்டுகள் ஆகிவிட்டன. அடிப்படை உறுப்பினரில் ஆரம்பித்து மண்டல், மாவட்டம், மாநிலம் மற்றும் தேசியம் என வளர்ந்துள்ளேன். எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு சென்றால் முதல்வருக்கு பயம் வந்துவிடுகிறது. உங்கள் அமைச்சர்கள் சிலர் போட்டி போடாத முடியாத நிலை இருக்கிறது. எங்களை (பாஜக) காட்டி திமுக, கூட்டணி கட்சிகளுக்கு ஒரு சீட்டை குறைக்கிறார்கள். எனவே ஸ்டாலினுக்கு நாங்கள் உதவி செய்து கொண்டிருக்கிறோம். விசிக, கம்யூனிஸ்டுகள் அடிமையாக இருக்கிறார்கள். பாஜக உள்ளே வந்துவிடும் என சொல்கிறார்கள். நீங்கள் கவலைப்பட வேண்டாம். நாங்கள் உள்ளே வந்துவிட்டோம்” என்று அவர் கூறினார்.