சவுதியில் அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல் ஈரான் போர் மேலும் தீவிரமடையும்: அதிபர் டிரம்ப் மிரட்டலால் பதற்றம்; அமெரிக்கர்கள் வெளியேற உத்தரவு
துபாய்: குவைத்தை தொடர்ந்து சவுதி அரேபியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது ஈரான் நேற்று டிரோன் தாக்குதல் நடத்தியது. இதைத் தொடர்ந்து, இப்போரை மேலும் தீவிரப்படுத்தப் போவதாக அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். அதோடு, மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து அனைத்து அமெரிக்கர்களும் உடனடியாக வெளியேற அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டிருப்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. ஈரான் மீதான அமெரிக்கா-இஸ்ரேலின் கூட்டு தாக்குதலைத் தொடர்ந்து அந்நாடு அண்டை நாடுகளான வளைகுடா நாடுகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
4வது நாளாக நேற்றும் இப்போர் உக்கிரமாக நடந்தது. இரவு முழுவதும் ஈரான் மீது இஸ்ரேல் அமெரிக்க படைகள் ஏவுகணைகள் ஏவி தாக்குதல் நடத்தின.
அதைத் தொடர்ந்து நேற்று காலை இஸ்ரேல், ஓமன், பக்ரைன் உள்ளிட்ட நாடுகள் மீது ஈரான் வான்வழி தாக்குதல் நடத்தியது. ஓமனில் ராஸ் அல் ரைமா துறைமுகத்தின் மீது ஈரான் டிரோன் தாக்கியதில் கரும்புகை வெளியேறிய வீடியோ காட்சிகள் வெளியாகின. மேலும், நேற்று முன்தினம் குவைத்தில் அமெரிக்க தூதரம் மீது ஈரான் டிரோன் தாக்குதல் நடத்திய நிலையில், நேற்று சவுதி அரேபியாவின் ரியாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் ஈரானின் 2 டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது.
இதில் தூதரக வளாகத்தில் சிறிய அளவில் தீ விபத்து ஏற்பட்டதாகவும் உடனடியாக அங்கிருந்து அமெரிக்க தூதரக அதிகாரிகள், ஊழியர்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டதாகவும் சவுதி அரேபியாவின் பாதுகாப்பு அமைச்சக அறிக்கை கூறி உள்ளது.
இது அமெரிக்க அதிபர் டிரம்பை மேலும் ஆத்திரமூட்டி உள்ளது. அமெரிக்க தூதரகம் மீதான தாக்குதலை கண்டித்த அவர் அளித்த பேட்டியில், ‘‘எங்கள் நோக்கம் தெளிவாக இருக்கிறது. ஈரானின் ஏவுகணை பலத்தை முற்றிலும் அழிப்பது, இனி எப்போதும் அவர்களால் அணு ஆயுதம் தயாரிக்க முடியாமல் செய்வது, அதற்கான உள்கட்டமைப்புகளை முழுவதுமாக அழிப்பதற்காக இந்த போர் நடக்கிறது.